கேரளாவை சேர்ந்த கணித முதுகலைப் பட்டதாரியும் ஆசிரியருமான 31 வயதான பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘என் கணவர் குற்றம் செய்து தற்போது விய்யூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எங்களுக்கு 2012-ல் திருமணம் நடைபெற்றது. அப்போதிலிருந்து குழந்தை பெற்றுக்கொள்ள நாங்கள் நிறைய சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆனால் எதுவும் கைக்கூடவில்லை. தற்போது நான் மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் எனக்கு ஐவிஎஃப் சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு என் கணவர் என்னுடன் 30 நாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பத்து வருடங்களுக்கும் மேலாக எங்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை பெற்றுக்கொள்வது எங்களின் வாழ்நாள் கனவு. எனவே, சிறையில் இருக்கும் என் கணவருக்கு சிகிச்சைக்காக 30 நாள்கள் விடுப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். முதலில், அந்த நபர் விடுப்புப் பெற தகுதியற்றவர் எனக் கூறி அரசு தரப்பு அந்தப் பெண்ணின் மனுவை எதிர்த்தது. பிறகு அந்தப் பெண் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி குன்ஹிகிருஷ்ணன், ‘ஒரு பெண், இதுபோன்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்துக்கு வந்தால் அதை புறக்கணிக்க முடியாது. ஒரு கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர் வெளியே வரும் போது அவரை வேறு நபராகக் கருதத் தேவையில்லை. மற்ற குடிமக்களைப் போலவே கண்ணியமான வாழ்க்கை நடத்த அவருக்கு முழு உரிமை உண்டு. எனவே IVF சிகிச்சையை தொடர மனுதாரரின் கணவருக்கு அதிகாரிகள் குறைந்தபட்சம் 15 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற்ற நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் சட்டத்தின்படி முடிந்த வரை விரைவாகவும், எந்த வகையிலும் IVF சிகிச்சையை மேற்கொள்வதற்கு அந்த நபருக்கு விடுப்பு வழங்குமாறு சிறைச்சாலை மற்றும் சீர்த்திருத்த இயக்குநர் ஜெனரலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தம்பதிக்கு சலுகை வழங்கிய நீதிமன்றம், அதே நேரம் அனைத்து வழக்குகளிலும் இந்த உடனடி உத்தரவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com
