முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் 4 அரிய செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் முசிறியிலுள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் 4 பழமையான செப்புப்பட்டையங்களை இந்து சமய அறநிலையத் துறையின் சுவடி திட்டப்பணிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட 46,020 கோயில்களில் உள்ள அரிய சுவடிகள், செப்புப்பட்டையங்கள், செப்பேடுகள் திரட்டிப் பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்ய சுவடித் திட்டப் பணிக்குழுவை அமைத்துள்ளது. சுவடித் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சு.தாமரைப் பாண்டியன் தலைமையிலான குழுவினர் இதுவரை 484 கோயில்களில் கள ஆய்வு செய்துள்ளனர்.

இதனிடையே, முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ப.சவுந்திரபாண்டி, சுவடிக் கள ஆய்வாளர் கோ.விசுவநாதனிடம் அளித்த தகவலின்படி சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் சுவடியியலாளர்கள் வெ.முனியாண்டி, க.தமிழ்ச் சந்தியா, கு.பிரகாஷ் குமார் ஆகியோர் கள ஆய்வு செய்து 4 செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்தனர்.

இது குறித்து சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது: விஜய நகர அரசர்களின் திக் விஜய சிறப்புகளை குறிக்கும் 4 செப்புப் பட்டயங்கள் கண்டறியப் பட்டுள்ளன. வட இந்தியாவிலிருந்து இஸ்லாம் தென்னிந்தியாவுக்குள் பரவாமல் தடுக்க வேண்டும் என சிருங்கேரி மடத்தின் மடாதிபதியான ஸ்ரீவித்தியாரண்யர் கருதினார்.

இந்து சமயத்தைக் காப்பாற்ற ஒரு புதிய அரசை உருவாக்க நினைத்து, படைத் தளபதிகளான ஹரிகரர், புக்கர் ஆகிய இருவர் மூலம் ஒரு பேரரசை உருவாக்கினார். இவர்கள் வித்யாரண்யர் நினைவாக வித்யா நகரம் என்ற நகரை நிர்மாணித்து விஜயநகரப் பேரரசாக ஆட்சி புரிந்தனர். இதை சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு எனும் நான்கு மரபினர் ஆண்டனர்.

4 செப்புப் பட்டையங்களிலும் தொடக்கநிலை விஜய நகர மன்னர்களின் வெற்றிச் சிறப்பும், பட்டப்பெயர்களும், திக் விஜயம் செய்த நிலை பற்றி கூறப்பட்டுள்ளன. குறிப்பாக,விஜயநகரப் பேரரசர்கள் ஈழத்தை வென்றது. துலுக்கர், ஒட்டியரை வென்றது. ராட பாணாயன்பட்டணத்தை அழித்தது. திருகோணமலை, வாதாபியைக் கொண்டது. சோழ, பாண்டிய மண்டலத்தையும் வென்றது குறித்து செய்திகள் காணப்படுகின்றன.

விஜய நகர அரசர்களின் அரிய பல பெயர்கள் இப்பட்டயங்களில் காணப்படுகின்றன. இதுவரை வரலாற்று ஆய்வுகளில் இடம் பெறாத பலரது பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. செப்பேடுகளின் இறுதியில் தர்மக் கட்டளைகளை பரிபாலம் பண்ணுபவர்கள் அடையும் பலனும்,

குந்தகம் செய்வோர் அடையும் பாவமும் கூறப்பட்டுள்ளன. அயிலுசீமை கால சந்திக்கட்டளை தர்மம் நிறுவுதல் பொ.ஆ.1709 விக்ருதி வருடம் வைகாசி மாதம் 1-ம் தேதி, ஆவணி மாதம் 3-ம் தேதி, 5-ம் தேதியில் செப்புப் பட்டயங்கள் எழுதப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

செப்புப் பட்டயத்தில் இடம்பெற்ற பெயர்கள்: விஜய நகர பேரரசை ஆண்ட தேவமகாராயர், மல்லிகார்ச்சுன ராயர், வீர நரசிங்கராயர், விச்சவராயர், விசைய ராயர், பல்லகஷ்தன் தேவராயர், விருப்பாட்சி தேவராயர், பிரபு பட தேவராயர், பிரதாப தேவராயர், நிமிம்பகத் தேவராயர், வசவ தேவராயர், வச்சிரவாகு தேவராயர், புசபலதேவராயர், பூதிராயர், உத்தமல்லைய தேவராயர், சென்ன வீர தேவராயர், தன் மராயர், ஈசுவரப்ப நாயக்கராயர்,

நரசாண் நாயக்க ராயர், கிருஷ்ண தேவராயர், அச்சுத தேவராயர், சதாசிவ ராயர், மகாராமா சீரங்கா ராயர், வேங்கிடபதி ராயர் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. இது மன்னர்கள், பாளையக்காரர்கள் செப்பேடுகளை வெளியிடும் போது தங்கள் முன்னோர்களின் பெயர்கள், வெற்றி பெருமைகளைக் குறிப்பிடும் மரபின் அடிப்படையில் அமைந்துள்ளது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *