சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜி தொடர்பான பல ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட மறுநாள், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் தம்பி சில ஆவணங்களை எரித்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி கைதான அடுத்தநாள், கோவை மேயர் கல்பனாவின் தாய், தம்பி குமார் வசிக்கும் வீட்டுக்கு அருகில் சில பெட்டிகள் வந்திறங்கியதாகவும், அதிலிருந்த காகித ஆவணங்களை குமார் அங்குள்ள மைதானத்தில் கொட்டி தீ வைத்து எரித்ததாக வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் எரிக்கப்படாத சில காகிதங்களில் பண பரிவர்த்தனை நடந்ததற்கான வார்த்தைகளும் உள்ளன. அதில், ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் என்று குறிப்பிட்டு அந்த தொகைக்கு காசோலை கொடுக்கப்பட்ட விபரமும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையிலேயே செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களா அல்லது மேயர் கல்பனா தொடர்பான ஆவணங்களா என்று அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே மேயர் குடும்பத்தினர் மீது அவர் வீட்டு அருகில் வசிக்கும் சரண்யா என்ற புகார் சமீபத்தில் பல்வேறு புகார்களை முன்வைத்திருந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சரண்யாவின் கார் மர்மமான முறையில் எரிக்கப்பட்டது. அதுகுறித்து சரண்யா தரப்பில் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்பனாவின் சகோதரர் குமாரிடம் விளக்கம் கேட்டபோது, “அது தவறான செய்தி. நான் குப்பை எரித்த வீடியோவை தவறான தகவல்களுடன் பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து புகாரளித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com