ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (டிச. 11) விவாதம் நடைபெற்றது. அப்போது, மாநிலங்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, கூட்டாட்சி மீதான தாக்குதல்’ என்றார்.

மேலும், பெரியாரின் வாசகங்களைத் தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக குறிப்பிட்ட எம்.எம்.அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, தி.மு.க-வின் கருத்துக்கு ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கிறதா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் மாநிலங்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தி.மு.க உறுப்பினர் அப்துல்லா கருத்து அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டுமா என்பதை மாநிலங்களவைத் தலைவர் முடிவுசெய்ய வேண்டும்’ என்றார்.

அதைத் தொடர்ந்து, பெரியார் கருத்தைக் குறிப்பிட்டு எம்.எம்.அப்துல்லா பேசியதை அவைக்குறிப்பிலிருந்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நீக்கினார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பெரியார் சொன்ன கருத்தை இங்கே உறுப்பினர் அப்துல்லா தெரிவித்தார். அதற்கு ஆதரவு தெரிவிப்பதா, வேண்டாமா என்பதை விவாதித்து முடிவெடுக்கலாம். ஆனால், உறுப்பினர் அப்துல்லாவை பேசவே விடாதது ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்றார்.
இந்தப் பேச்சை ஆளுங்கட்சியினர் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகின்றனர் என்றார் தி.மு.க உறுப்பினர் திருச்சி சிவா. தி.மு.க உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், ‘ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், நாடாளுமன்றம் எடுத்த முடிவை அங்கீரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பேசுவது சரியல்ல. நீதித்துறையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்’ என்றார்.
பெரியார் கருத்தைக் குறிப்பிட்டு எம்.எம்.அப்துல்லா பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘மாநிலங்களவையில் எம்.எம்.அப்துல்லா எம்.பி உரையாற்றியபோது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியபோது, தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில், தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் – எப்போதும் – எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்’ என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் அந்தத் தீர்ப்பு உவப்பனதுதான். அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததே மத்திய பா.ஜ.க அரசுதானே. அதே நேரத்தில், அந்தத் தீர்ப்பை சில அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. அந்த வகையில்தான், பெரியாரின் கருத்தைக் குறிப்பிட்டு தி.மு.க உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்.

பெரியார் பெயர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ‘பெரியார், பா.ஜ.க-வுக்கு விரோதியாக இருக்கலாம். பெரியாரின் கருத்துக்கள் பா.ஜ.க-வினருக்கு கசக்கலாம். ஆனால், அவர் ஒன்றும் தேசத்துக்கு விரோதி இல்லை. தி.மு.க., இடதுசாரிகள் உட்பட பல அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்படும் சாவர்க்கரின் கருத்துக்களை மேற்கோள் காண்பித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி-க்கள் பேசவில்லையா. சாவர்க்கரை மேற்கோள் காண்பித்து பா.ஜ.க எம்.பி-க்கள் பேசிய கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறதா?’ என்று கேட்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
