கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் எம்.எல்.ஏ-க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆய்வுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், அமைச்சர் கயல்விழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 166 பேருக்கு தமிழக அரசு, வேலைவாய்ப்புக்கான பணி ஆணையை வழங்கியிருக்கிறது. இதே போன்று தமிழக ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு உணவுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

அப்போது அவரிடம், அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கயல்விழி, “தப்பு செய்தவர்கள் தொடர்பாகச் சோதனைசெய்து, அரசு நடவடிக்கை எடுத்துதானே ஆகணும். எந்த அரசாக இருந்தாலும் அப்படித்தானே பண்ணுவாங்க. மக்களுடைய பணத்தை தவறாகப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும்” என்றார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர் ஒருவர், `தேர்தல் சமயத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் எதிர்க்கட்சிகள்மீது ஏவுகிறதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கயல்விழி, “தேர்தல் சமயத்தில் அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. அதனால், தேவையில்லாமல் இப்படி பண்ணுகிறார்கள். எந்த ரெய்டு வந்தாலும் நாங்கள் பயப்படப்போவதில்லை. நாங்கள் உறுதியாகத்தான் இருக்கிறோம்” என்றார். சொந்தக் கட்சி அமைச்சரான எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடப்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் கயல்விழி இத்தகைய பதிலை அளித்ததால், அங்கிருந்த தி.மு.க-வினரே அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்ந்துவிட்டனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
