எனவே, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இவர்கள் இருவரையும் சேர்த்துக்கொள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி எப்படி உடன்படுவார்? இது பற்றிய பேச்சையே அவர் விரும்ப மாட்டார் என்பதைத்தான், இவர்கள் இருவர் குறித்தும் இதுவரை எடப்பாடி பழனிசாமி பேசிவந்திருக்கும் கருத்துக்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கூட்டணிக்கு டி.டி.வி. தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் வந்தால் இணைந்து செயல்படுவீர்களா..’ என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘தமிழகத்தைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்குகிறது. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது’ என்றார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் நேரத்தில் இன்னும் சில கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

‘இந்தியா’ கூட்டணிக்கு போட்டியாக டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்தது. ஆனால், ஓ.பி.எஸ்ஸை அழைக்கவில்லை. அது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘என்.டி.ஏ கூட்டணி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதனால் நான் செல்லவில்லை. அவர்களாக (பா.ஜ.க) முறித்துக்கொள்ளும் வரையில் நான் அந்தக் கூட்டணியில் தொடருவேன்’ என்றார்.
இதற்கிடையில், ‘ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவும் அழைக்கும், ‘இந்தியா’ கூட்டணியும் அழைக்கும்’ என்று கூறி கலகலப்பை உண்டாக்கியிருக்கிறார் ஓ.பி.எஸ் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான பெங்களூர் புகழேந்தி. மறுபுறம் ஓ.பி.எஸ், டி.டி.வி ஆகிய இருவரும் பொது எதிரி திமுக தான் என பேசி வருவதால், கூட்டணி காட்சிகள் எப்படி எப்படி மாறும் என போக போக தான் தெரியும்.!
நன்றி
Publisher: www.vikatan.com
