பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருக்கிறது. `அதிமுக முறித்துக்கொண்டது’ என்று சொல்வதை விட அண்ணாமலை முறித்து வைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் அதிமுக குறித்தும் அக்கட்சியின் மறைந்த தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை பேசிய பேச்சுக்கள்தான் முறிவுக்குக் காரணம் என்பதை அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறது.

மேலும் அண்ணாமலையின் பேச்சுக்களை டெல்லி மேலிடம் கட்டுப்படுத்த தவறிவிட்டது, அதனால் டெல்லி சொல்லித்தான் அண்ணாமலை இப்படியெல்லாம் பேசுகிறாரோ என்று அதிமுக முன்னாள் அமைச்சர்களும் முதன்முறையாக பாஜக மேலிடம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அதிமுக-வின் இந்த முடிவை சற்றும் எதிர்பாராத பாஜக தலைமை, அண்ணாமலையை டெல்லி அழைத்திருக்கிறது. டெல்லிக்கு செல்லும் முன்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜக போன்ற கட்சியில் மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது” என பேசினார்.

டெல்லி செல்லும் முன் அண்ணாமலை இப்படிக் கூறியதால், பதவி பறிக்கப்படலாம் என்ற விரக்தியில் அண்ணமலை இவ்வாறு பேசுகிறார் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அண்ணாமலையின் இப்பேச்சை அடுத்து, “மாநிலத் தலைவர் பதவி இல்லையென்றால் பாஜக-வில் இருக்க மாட்டீர்களா?” என கேள்வி கேட்க, அந்த நொடியே அதிர்ந்து போனார் அண்ணாமலை. ஆவேசமான முறையில் அந்த பத்திரிகையாளரை அண்ணாமலை எதிர்கொண்ட விதமும் சர்ச்சையைக் கிளப்பியது.
“இரண்டாம் கட்ட பாதயாத்திரை முடிவுற்ற நிலையில், அதுகுறித்து விளக்கவே டெல்லி செல்கிறேன், முதல்கட்ட பாதயாத்திரை முடிந்தபோதும் இதுபோன்று டெல்லி பயணத்தை மேற்கொண்டேன்” என்றும் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இரண்டாம் கட்ட பயணம் முடிந்தவுடன் டெல்லி செல்வது என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்ததால், அக்டோபர் 3-ஆம் தேதி அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று எதனால் அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்னர், அண்ணாமலை இல்லாமலே கூட்டம் நடைபெற்றது. பாஜக தரப்பில், இது தலைவர் இல்லாமல் நடக்கும் சாதாரண கூட்டம் தான். அண்ணாமலை வந்த பின்னர் மீண்டும் நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “பாதயாத்திரையில் நடப்பது குறித்தெல்லாம் தினம்தினம் டெல்லிக்கு தகவல் போய்க்கொண்டுதான் இருக்கிறது. அதை அண்ணாமலையே நேரில் போய்தான் விளக்க கொடுக்க வேண்டுமென்றால் எந்த அவசியமும் இல்லை. கூட்டணியில் ஏற்பட்ட பிளவு குறித்து விளக்கம் கேட்கத்தான் அண்ணாமலை அழைக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதை நேரடியாக எப்படி சொல்ல முடியும்? அதனால் பாதயாத்திரையை காரணமாகச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அண்ணாமலை கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்தே டெல்லி தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும். டெல்லியின் உத்தரவுகள் எப்படி இருக்கும் என்று எங்களுக்கும் சஸ்பென்ஸாகத்தான் இருக்கிறது.
அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அவ்வளவு ஈசியாக டெல்லி தலைமை முடிவெடுத்து விடாது என்பது மட்டும் நிச்சயம். கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை தலையிடாதவாறு, புதிதாக குழு அமைக்கப்படலாம். அந்த குழு அதிமுகவோடு பேசலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.” என்கின்றனர்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று 2 ஆண்டுகள்தான் முடிந்திருக்கின்றன. இந்த 2 ஆண்டுகளில் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி குறித்த சர்ச்சைகள் பலமுறை வெடித்திருக்கின்றன. ஆனால் அந்த விவாதமும் சர்ச்சையும் தற்போது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. மாநிலத் தலைவர் பதவி இல்லாவிட்டால், மீண்டும் ஊருக்கே போய் விவசாயம் பார்த்து பிழைத்துக் கொள்வேன் என்று அண்ணாமலையும் அடிக்கடி கூறி வருகிறார். அதனால் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது அண்ணாமலைக்கும் தெரிந்துதான் இருக்கிறது. ஆனால் பதவி இல்லாமல் அண்ணாமலை இருப்பாரா என்பது சந்தேகம்தான் என்றும் கமலாலய வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

“அண்ணாமலையைப் பொறுத்தவரையில் கட்சி விளம்பரமா அல்லது சுய விளம்பரமா என்றால் சுய விளம்பரத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறார். அவரோடு நெருங்கிப் பழகிய 2 ஆண்டுகளில் இது எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஒவ்வொரு அசைவிலும் அவரை கணக்கச்சிதமாக முன்னிலைப்படுத்தி நகர்ந்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்களில் அண்ணாமலை அளவுக்கு வெளிச்சம் பெற்ற தலைவர்கள் யாரும் இல்லை. அதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதனால் மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டால், அதற்கு மேல் ஏதாவது ஒரு பொறுப்பை கட்டாயம் கொடுக்க வேண்டும், கொடுப்பார்கள்.” என்கின்றனர் உள்விவரம் அறிந்த சிலர்.
அதேசமயம் பாஜக சீனியர்கள் சிலரிடம் பேசுகையில், “அண்ணாமலை தலைவரான பிறகுதான் பாஜக தமிழ்நாட்டில் எப்போதும் லைம்லைட்டில் இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முன்பு யார் தலைமையிலும் தமிழக பாஜக இவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டே ஓரிரு இடங்களை பெற்றுவிட்டால் போதும் என்று நினைக்கிற கட்சி பாஜக இல்லை. சுயமாக நாங்கள் வளர்ந்து விருட்சமாக வேண்டுமென்பதுதான் எங்களுடைய கனவு, லட்சியம். அதற்கு மற்ற யாரையும் விட மிகச்சரியான நபராக அண்ணாமலைதான் இருப்பார். அது டெல்லிக்கு நன்றாகத்தான் தெரியும். அதனால் அண்ணாமலையின் பேச்சுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் எடுக்கப்படுமா என்பது சந்தேகம்தான்” என்றும் கூறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com