
பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
“எடப்பாடியாரின் துணிச்சல் குறித்துப் பேச ஸ்டாலினுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த தி.மு.க-வுக்குமே கடுகளவு அருகதைகூட கிடையாது.
அ.தி.மு.க துணிச்சலால் பிறந்த இயக்கம். மத்திய பா.ஜ.க அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நினைத்தபோது அதை எதிர்த்துப் பேசியதுடன், டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றி நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. ஆனால், சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து தி.மு.க கொண்டுவந்த தனித் தீர்மானத்தில், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தைகூட கண்டிக்கவில்லை. கூட்டணியிலுள்ள கட்சியை எதிர்க்கத் துணிவில்லாமல் வெறும் கண்துடைப்புக்காகத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது தி.மு.க. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக 22 நாள்கள் நாடாளுமன்றத்தையே முடக்கிய வரலாறு அ.தி.மு.க-வுக்கு உண்டு. கடந்தகாலத்தில், சுயநலத்துக்காக மத்திய பா.ஜ.க அரசில் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சி தி.மு.க. ஆனால், மக்கள் நலனுக்காக பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி, ஆட்சியையே கலைத்த கட்சி அ.தி.மு.க. எனவே, துணிச்சல் பற்றி எங்களுக்கு வகுப்பெடுக்க தி.மு.க-வுக்கு எந்தத் தகுதியும் கிடையாது!
நன்றி
Publisher: www.vikatan.com
