மதுரை ரயில் விபத்து: ரயிலுக்குள் சிலிண்டர், அடுப்பு, விறகு வந்தது எப்படி? உயிர் தப்பிய பயணி அதிர்ச்சி தகவல்

மதுரை ரயில் விபத்து: ரயிலுக்குள் சிலிண்டர், அடுப்பு, விறகு வந்தது எப்படி? உயிர் தப்பிய பயணி அதிர்ச்சி தகவல்

மதுரை ரயில் விபத்து

மதுரை ரயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருந்த பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் ரயில் நிலையங்களில் செய்யப்படும் பரிசோதனைகளையும் மீறி சமையல் செய்வதற்கான எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்புகள், விறகுக் கட்டைகளை அவர்கள் சட்டவிரோதமாக கொண்டு வந்தது எப்படி? தீ விபத்து எப்படி நேரிட்டது? அதிக உயிர் பலி ஏற்படக் காரணம் என்ன?

கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய், விறகுகள் வந்தது எப்படி?

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே அமைந்துள்ள சித்தாப்பூரில் செயல்பட்டு வரும் (Basin Tour & traves) பாசில் டூர் & ட்ராவல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தென் தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு யாத்திரை ஏற்பாடு செய்து இருக்கிறது.

அந்த சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட 64 பேர் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தங்களது பயணத்தை லக்னோவில் இருந்து ரயில் மூலம் தனிப் பெட்டியில் பயணத்தை துவங்கி இருக்கின்றனர்.

ஒரு ரயில் பெட்டியில் மட்டுமே இந்த யாத்திரீகர்கள் பயணிகள் பயணம் செய்து இருக்கிறார்கள். ஆகவே அந்த வழியாக செல்லும் ரயிலுடன் இவர்களது ரயில் பெட்டி இணைக்கப்பட்டு அந்த ஊருக்குச் சென்று அங்கே தரிசனம் செய்து வந்து இருக்கிறார்கள்.

ரயில் செல்லும் நேரத்திற்கு முன்பே ரயில் நிலையத்திற்கு சென்றதால் அவர்களது ரயில் பெட்டி தனியாக நிறுத்தி வைக்கப்பட்டு ரயில் நேரத்தின் பொழுது அந்த குறிப்பிட்ட ரயிலுடன் இணைக்கப்பட்டு அவர்கள் மற்ற ஊர்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்திருக்கின்றனர்.

நேற்று, திருவனந்தபுரம் பத்பநாப சுவாமி கோவில் சுவாமி தரிசனம், நாகர்கோவில் உள்ள கோவில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, அருகே பகுதிகளுக்குச் தரிசனம் செய்து ரயில் பயணிகள் நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து ரயில் மூலம் மதுரை அதிகாலை 3: 45 மணியளவில் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

மதுரை ரயில் விபத்து

விபத்து நேரிட்டது எப்படி? அதிக உயிர் பலி ஏன்?

இவர்களது ரயில் பெட்டி போடி ரயில் பாதையில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இரயிலின் உள்ளேயே டீ போடுவதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து இருக்கின்றனர். அப்பொழுது எதிர்பாரா விதமாக அந்த கேஸ் சிலிண்டர் வெடித்து ரயில் பெட்டி முழுவதும் தீப்பிடிக்க தொடங்கி இருக்கிறது.

ரயில் பெட்டி முழுவதும் புகை சூழந்ததால் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு ஒவ்வொருவராக வேகவேகமாக கீழே இறங்கி இருக்கின்றனர். ரயில் பெட்டியின் ஒரு புற ரயில் கதவு அருகே சமையல் செய்யும் பணி நடைபெற்றதால் அந்த வழியாக செல்ல முடியாத அளவிற்கு இரு கதவையும் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.

இதன் காரணமாக ஒரு புறத்தில் இருக்கு இரு கதவுகள் மட்டுமே பயணிகள் இறங்கக்கூடிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டதால் 9 பேர் ரயிலின் உள்ளேயே மாட்டிக் கொண்டு இறந்து இருக்கின்றனர்.

மதுரை ரயில் விபத்து

சிலிண்டர், மண்ணெண்ணெய், விறகுகள் அகற்றம்

5 மணி அளவில் எல்லிஸ் நகர் காலனியை சேர்ந்த மன்னர் பிரகாஷ் ரயில் பெட்டி தீ விபத்தில் எரிவதைக் கண்டு உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறை தகவல் கொடுத்து இருக்கிறார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயிணை கட்டுப்படுத்தும் பணியை துவங்கினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயிணை முழுவதுமாக கட்டுப்படுத்தினர்.

ரயில் பெட்டிக்குள் இருந்து 2 சமையல் சிலிண்டர்கள், 3 மண்ணெண்ணெய் அடுப்புகள், சமையல் செய்வதற்கு தேவையான விறகு கட்டைகள், பாத்திரங்கள், காய்கறிகளை தீயணைப்புத் துறையினர் ரயில பெட்டிக்கு வெளியில் தூக்கி வீசினர்.

நிகழ்விடத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர் காவல் ஆணையர் பிரதீப், ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் அனந்த் பத்மநாபன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பணியினை துரிதப்படுத்தினர்.

ரயில் பெட்டி முழுவதும் அணைக்கப்பட்ட பிறகு 5 ஆண்கள் 4 பெண்கள் உடலாக மீட்கப்பட்டனர். இதில் சிலரது உடல் முழுவது எரிந்தது.

உடல்கள் அனைத்தும் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது.

மதுரை ரயில் விபத்து

மீட்கப்பட்டவர்கள் எங்கே உள்ளனர்?

விபத்து நடந்த இடத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்து “பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக”, தெரிவித்தார்.

இதுகுறித்து BBC தமிழிடம் பேசிய மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரதீப், ” 9 பேரின் உடல் தற்பொழுது வரை மீட்கப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்” தெரிவித்தார்.

இந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களில் ரயில்வே மருத்துவமனையில் 6 பேரும், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

விபத்து நேரிட்ட ரயில் பெட்டியில் பயணித்தவர்கள் 39 பேர் பாதுகாப்பாக மதுரை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் இருக்கக்கூடிய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் உடைகள் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆறுதல்

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என் சிங் மற்றும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காத்திருப்பு அறையில் தங்கி இருந்த ரயில் பயணிகளை நேரில் சந்தித்து விபத்து குறித்து கேட்டு அறிந்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உயிரிழந்தவர் குடும்பத்திடம் அமைச்சர் பி. டி ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

தொடர்ந்து ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரயில் பயணிகளை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என் சிங் இணைந்து பார்வையிட்டு ரயில் பயணிகளுக்கு ஆறுதலை தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 6 பேர் ரயில்வே மருத்துவமனையிலும் 2 அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் பெரிய அளவு இல்லை. இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.

மீதம் இருக்கும் யாத்திரை பயணிகள் யாரேனும் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் சார்பில் செய்வதற்கு தயாராக இருப்பதாக” தெரிவித்தார்.

மதுரை ரயில் விபத்து

சிலிண்டர், விறகு, அடுப்புகளை ஏற்றியது எப்படி?

தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர் என் சிங் “இந்த விபத்து ஒரு சோகமான நிகழ்வு. லக்னோ ரயில் நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகு ரயில் பயணிகள் ரயில் பெட்டியில் ஏற்றி அவரது யாத்திரை பயணத்தை துவங்கியுள்ளனர்.

சட்டவிரோதமாக சுற்றுலா நிறுவனத்தார் சிலிண்டர், அடுப்புகள், விறகுகளையும் ஏற்றி இருக்கலாம். இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டப்படியும் ரயில்வே சட்டப்படியும் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்றே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது உடல்கள் விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும்”, தெரிவித்தார்.

மதுரை ரயில் விபத்து
படக்குறிப்பு,

உயிர் தப்பிய பயணி அசோக்குமார்

விபத்து நேரிட்டது எப்படி? உயிர் தப்பிய பயணி தகவல்

இந்த ரயிலில் பயணித்து காயத்துடன் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லக்னோவை சேர்ந்த அசோக்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது

“ரயில் விபத்து குறித்து பேசும்பொழுது பாசின் டூர் & டிராவல் நிறுவனத்தில் ரூ.21,700 பணம் செலுத்தி சுற்றுலாவிற்கு வந்தோம், சுற்றுலா பயணிகள் யாரும் சிலிண்டர் போன்ற உபயோக பொருள்களை எடுத்து வரவில்லை. டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து 5 முதல் 7 பேர் இந்த ரயில் பயணத்தில் பயணித்தனர் அவர்களே ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் சமைத்து எங்களுக்கு தந்து வந்தனர். இன்று காலை அதே போல் ரயிலின் உள்ளே சமைத்த போது விபத்து ஏற்பட்டது”, குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக அந்த பாசின் டூர் & டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். 39 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள் மீதம் உள்ள நபர்கள் யார், யார் அதில் யார் பாசின் சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதை குறித்து ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *