மதுரை விமான நிலையம் மத்திய அரசால் நிராகரிக்கப்படுகிறதா? சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் என்ன பிரச்னை?

மதுரை விமான நிலையம் மத்திய அரசால் நிராகரிக்கப்படுகிறதா? சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் என்ன பிரச்னை?

மதுரை விமானநிலையம்

பட மூலாதாரம், Madurai international Airport/FB

படக்குறிப்பு,

கடந்த மார்ச் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணிநேர விமான நிலையமாக மாற்றப்பட்டு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தியாவில் டெல்லி, பெங்களூர், வாரணாசி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கோவை, திருவனந்தபுரம், திருச்சி உள்ளிட்ட 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி என மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

தென் மாவட்ட மக்களின் விமான போக்குவரத்தில் மதுரை விமான நிலையம் முக்கியப் பங்காற்றி வருகிறது. மதுரை விமான நிலையத்தை நாள்தோறும் 3000 முதல் 3500 வரையிலான விமானப் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி, சென்னை, பெங்களூர் போன்ற உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமான சேவைகளும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணிநேர விமான நிலையமாக மாற்றப்பட்டு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அதற்கான நடவடிக்கைகளும் மதுரை விமான நிலையத்தில் நடைபெறவில்லை.

இரவு 9 மணியோடு விமானப் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. அதற்குப் பிறகு விமான சேவை மதுரை விமான நிலையத்திலிருந்து இருப்பதில்லை.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதில் உள்ள சிக்கல் என்ன? பெரிய விமானம் இறங்கும் அளவிற்கு விமான நிலையத்தின் கட்டமைப்புகள் உள்ளனவா? மதுரை விமான நிலையம் எப்போது சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்படும்?

பெரிய விமான இயங்குதளம் இல்லை

மதுரை விமான நிலையம்

பட மூலாதாரம், Madurai international Airport/FB

படக்குறிப்பு,

மத்திய அரசு மதுரை விமான நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் விமான நிலையமாக அறிவித்தது.

மதுரை விமான நிலையத்தின் இறங்குதளம் சிறியது. இதனால் அதில் பெரிய விமானங்களை இயக்குவதில் சிக்கல்கள் உள்ளது, என பிபிசி தமிழிடம் கூறுகிறார் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் பிபிசி தமிழிடம் பேசிய விமானப் போக்குவரத்து துறை அதிகாரி.

“மதுரை விமான நிலையத்திலிருந்து நாள்தோறும் 16 முதல் 17 விமானங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மாதம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விமானப் பயணிகள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை கொரோனா காலத்திற்கு முன்பு 1.20 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.

மதுரையிலிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற உள்நாட்டு விமான சேவைகளும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்கான விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மதுரை விமான நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் விமான நிலையமாக அறிவித்தது. ஆனால் 24 மணிநேரமும் இயங்கும் அளவிற்கு விமான போக்குவரத்து மதுரை விமான நிலையத்தில் தற்போது இல்லை.

மதுரை விமான நிலையத்தில் சிறிய இறங்குதளம், பாதுகாப்பு அதிகாரிகள் பற்றாக்குறை, வெளிநாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்யாதது போன்ற காரணங்களால் வெளிநாடுகளுக்கு விமான சேவையைத் தொடங்க முடியாமல் இருக்கின்றன,” என்றார்.

வெளிநாட்டுக்கு விமானம் இயக்க விமான நிறுவனங்கள் ஆர்வம்

மதுரை விமான நிலையம்

பட மூலாதாரம், Madurai international Airport/FB

படக்குறிப்பு,

மதுரை விமான நிலையத்திற்காக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் நடைபெற்று வருகின்றன.

மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குவதற்கு விமான நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் மத்திய அரசு அதற்குரிய பாதுகாப்பு, கட்டமைப்பு, இயங்குதளம் ( Run Way) ஆகிய வசதிகளை உறுதி செய்தால் மதுரையிலிருந்து வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்து இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன”, என கூறினார்.

மேலும் கூறிய விமானப் போக்குவரத்து அதிகாரி, “மதுரை விமான நிலையத்திற்காக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் நடைபெற்று வருகின்றன. அதில் நிலங்களைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.

விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உயரப்படுத்தும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். இதைச் செய்தால் மதுரை விமான நிலையத்தை 24 மணிநேரமும் உரிய பாதுகாப்புடன் விமான சேவைக்குப் பயன்படுத்த இயலும்,” என்கிறார்.

சர்வதேச விமான நிலையமாக மாற்றாதது மக்களுக்கு கூடுதல் செலவு

மதுரை விமான நிலையம்

பட மூலாதாரம், Madurai international Airport /FB

படக்குறிப்பு,

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாரணாசி சர்வதேச விமான நிலையம் வெறும் 8,280 பயணிகளை மட்டுமே கையாண்டு உள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் ரத்தினவேல் கூறும்போது, “மதுரை விமான நிலையத்திலிருந்து பிற நாடுகளுக்கு விமான சேவை இல்லாததால் தென் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பூக்கள், காய்கறி, பழங்கள் போன்ற பொருட்களை ஏறுமதி செய்ய திருச்சி, கொச்சி அல்லது சென்னை விமான நிலையங்களுக்குச் செல்லும் சூழல் உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வாரணாசி சர்வதேச விமான நிலையம் வெறும் 8,280 பயணிகளை மட்டுமே கையாண்டு உள்ளது. ஆனால் இதே மாதத்தில் மதுரை விமான நிலையம் 17,000க்கும் அதிகமான விமான பயணிகளை கையாண்டு இருக்கிறது.

ஆனால், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன் எனப் புரியவில்லை,” என்கிறார்.

மதுரை விமான நிலையம் 2010க்கு பிறகுதான் சுங்க விமான நிலையமாக பல கட்டப் போராட்டதிற்குப் பின் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 10 சுங்க விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமும் ஒன்று.

தமிழகத்தில் மிக முக்கியமான நகரமாக மதுரை விளங்கும் சூழலில் பிற நாடுகளுடன் இரு வழி விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மத்திய அரசு விரைந்து செய்து விமானப் போக்குவரத்தைத் துவங்க வேண்டும்,” எனக் கூறுகிறார்.

‘மத்திய அரசின் அரசியல்’- மதுரை எம்.பி சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன்

பட மூலாதாரம், Su.venkatesan/TWITTER

படக்குறிப்பு,

மதுரை விமான நிலையத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது என்கிறார் எம்.பி. சு.வெங்கடேசன்.

“மதுரை விமான நிலையத்தை 4வது சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என டிவிட்டரில் நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன்.

அதற்கு, பதில் அளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா இந்தியாவில் உள்ள 19 சர்வதேச விமான நிலையங்களில் சென்னை, கோவை, திருச்சி என மூன்று சர்வதேச விமான நிலையங்கள் தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றன. அதுவே உங்களுக்குப் போதும் எனக் குறிப்பிட்டார்.

அவருக்கு நான் அளித்த பதிலில் 19 மாநிலங்கள் மத்திய அரசுக்குச் செலுத்தும் ஜி.எஸ்.டி வரியை தமிழகம் ஒரே மாநிலமாக செலுத்தி வருகிறது. நான்கு அல்ல 14 சர்வதேச விமான நிலையங்களையே கேட்பதற்கும் தகுதியான மாநிலம் தமிழ்நாடு எனக் கூறினேன்,” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சு.வெங்கடேசன், “குறைந்த அளவிலான பயணிகளைக் கையாளும் வாரணாசி விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலையத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் மதுரை விமான நிலையம் வாரணாசி விமான நிலைதத்தைவிட பன்மடங்கு சர்வதேச விமானப் பயணிகளைக் கையாண்டு வருகிறது. ஆனால் மதுரை விமான நிலையத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது,” என்றார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதை, விரிவுபடுத்த வேண்டுமென விமானப் போக்குவரத்து துறைக்கும் பல்வேறு விதமான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகக் கூறுகிறார் சு.வெங்கடேசன்.

“விமானப் போகுவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது பாதுகாப்புப் படை வீரர்கள் இல்லை எனக் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நானும், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரும் நாடாளுமன்றத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பினோம்.

அதேபோல், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதிமுக அரசு அதைக் கிடப்பில் போட்டுவிட்டது,” என்றார்.

“ரிங் ரோடு விரிவாக்கம், சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது, விமான நிலையத்தை 24 மணிநேரமும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால் தென் தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு வெளிநாட்டு விமான சேவை பயன் தரும், மத்திய அரசு எய்ம்ஸ், நெய்பர், சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் போன்றவற்றை வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது,” எனக் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *