
பட மூலாதாரம், MIKHAIL SVETLOV/GETTY IMAGES
“இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி கடினமான நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாகவும், அதற்காக அவர் எந்த அழுத்தத்திற்கும் ஆளாகவில்லை என்றும்” சமீபத்தில் இந்திய பிரதமர் மோதியை புகழ்ந்து பேசியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
‘ரஷ்யா அழைக்கிறது’ (ரஷ்யா காலிங்) நிகழ்வில் இது குறித்து பேசியுள்ள புதின் “ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவு எல்லா துறைகளிலும் வலுப்பெற்று வருவதாக” தெரிவித்துளார்.
“மோதியை மிரட்டியோ அல்லது கட்டாயப்படுத்தியோ இந்திய மக்கள் மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான முடிவுகள் அல்லது நடவடிக்கைகளை எடுக்க வைக்க முடியும் என்று தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார் புதின்.
ரஷியாவின் செய்தி முகமை டாஸின் தகவல்படி, இது போன்ற எந்த விதமான விவாதங்களும் பிரதமர் மோதி மற்றும் தனக்கிடையில் எப்போதும் நடந்ததில்லை என்றும் கூறியுள்ளார் புதின்.
“நான் வெளியில் இருந்து மட்டுமே அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் சில நேரங்களில் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாப்பதற்காக அவர்கள் எடுக்கும் கடுமையான நிலைப்பாடுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார் புதின்.
ரஷ்யா அதிபர் புதின் பிரதமர் நரேந்திர மோதியை புகழ்வது முதல்முறை ஒன்றும் அல்ல.
கடந்த ஜூன் மாதம் கூட, “ நரேந்திர மோதி ரஷ்யாவின் நெருங்கிய நண்பர். சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தை அவர் செயல்படுத்தினார். அது இந்திய பொருளாதாரத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது நம்முடையதாக இல்லாததாக இருந்தாலும் கூட நமது நண்பருடையது. அந்த திட்டத்தை நாம் கூட பின்பற்றலாம்.” என்று பேசியுள்ளார் புதின்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் புதின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா குறித்தும் இந்திய பிரதமர் குறித்தும் அதிகம் பேசப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மோதி ஒரு புத்திசாலித்தனமான நபர் என்று விவரித்துள்ளார் புதின். பிரதமர் மோடியின் தலைமையில் கீழ் வளர்ச்சிசார் துறையில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார் அவர்.

பட மூலாதாரம், REUTERS
வாஜ்பாயுடன் ரஷ்யா சென்ற மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்
2000மாவது ஆண்டில் போரிஸ் யெல்ட்சினுக்குப் பிறகு ரஷ்ய அதிபராக தேர்வு செய்யப்பட்டார் விளாடிமிர் புதின். அவர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து பிறகு ரஷ்யாவின் புதிய அதிபராக வந்தவர்.
அதிலிருந்து ஒரு வருடம் கழித்து 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் நரேந்திர மோதி.
முதலமைச்சராக பதவியேற்ற ஒரு மாத காலத்திற்குள், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் மாஸ்கோ செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வாஜ்பாயுடன் ரஷ்யா சென்ற மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இதுவே ஒரு முதலமைச்சராக முதல் முறை ஒரு நாட்டின் தலைவரை அவர் சந்தித்தது.
2018 ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோதி மாஸ்கோ சென்றபோது, இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ரஷ்யாவும் விளாடிமிர் புதினும் தனக்கு ஏன் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை கூறியிருந்தார் அவர்.
அதிலிருந்து பல சமயங்களில் வெவ்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோதியை புகழ்ந்து பேசி வருகிறார் விளாடிமிர் புதின். சில நேரங்களில் அவரை “உண்மையான தேச பக்தர்” என்று பாராட்டும் புதின், சில சமயங்களில் மோதியின் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள சுதந்திரமான வெளியுறவு கொள்கைகளையும் பாராட்டி பேசியுள்ளார்.
நரேந்திர மோதியின் தலைமையின் கீழ், எப்போதும் இந்தியா ரஷ்யாவுடனான தனது உறவை பாதுகாத்து வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு பிறகு பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. ஆனால், இந்தியா ஒருபோதும் பொதுவெளியில் ரஷியாவை விமர்சிக்கவில்லை மற்றும் மேற்கத்திய தடையையும் தாண்டி மாஸ்கோவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூட, “ இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவு அசைக்கமுடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மோதி மற்றும் புதினுக்கு இடையில் பல ஒற்றுமைகள் உள்ளதாக கூறுகிறார்
இந்தியா – ரஷ்யா உறவில் புதின் – மோதி நட்பின் தாக்கம் என்ன?
புதினின் சமீபத்திய அறிக்கைக்கு பலரும் பல விதமான விளக்கங்களை கொடுக்கின்றனர். ஆனால், நிபுணர்களோ இது மிகவும் இயல்பான ஒன்றுதான் என்று நம்புகின்றனர். இதற்கு பின்னால் புதின் மற்றும் மோதிக்கு இடையே உள்ள நெருக்கமான நட்பே காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள்.
ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் ரஷ்யா மற்றும் மத்திய ஆசியா குறித்த படிப்புகளுக்கான மையத்தில் பேராசிரியராக இருக்கும் சஞ்சய் குமார் பாண்டே , மோதி மற்றும் புதினுக்கு இடையில் பல ஒற்றுமைகள் உள்ளதாக கூறுகிறார்.
“இருவருமே தங்களது நாடுகளில் மிகவும் பிரபலமானவர்கள். இரு தலைவர்களும் வசீகரமான மற்றும் சக்தி வாய்ந்த அடையாளத்தை கொண்டுள்ளனர். இருவருமே தங்களை உண்மையான தேச பக்தர்களாக காட்டிக் கொள்கின்றனர். தேசிய நலனையே தாங்கள் முதன்மையாகக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்” என்கிறார் அவர்.
பாண்டேவின் கருத்துப்படி, “ புதின் அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அதே சமயம் பிரதமர் மோதியும் ஏற்கனவே இப்போதைக்கு எங்கும் செல்ல போவதில்லை என்று கூறிவிட்டார். எனவே இருவரின் கூட்டணியும் நீடித்து நிலைத்திருக்கும்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவைப் பொறுத்தவரை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பிடமிருந்து இந்தியாவுக்கு நிறைய அழுத்தம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக யுக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் தொடங்கியதில் இருந்தே இந்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
இருப்பினும் விளாடிமிர் புதின் மற்றும் ரஷ்யாவை பொது வெளியில் வெளிப்படையாக கண்டிப்பதை தவிர்த்து வருகிறது இந்தியா.
சமர்கந்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோதி இது குறித்து வலுவான கருத்தை தெரிவித்திருந்தார். அப்போது “இது போருக்கான காலம் இல்லை” என்று அவர் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, ரஷ்யாவின் நலன்களுக்கு எதிரான எந்த விதமான நடவடிக்கைகளையும் இந்தியா ஒருபோதும் எடுப்பதில்லை. அதற்கெதிரான தீர்மானங்களுக்கும் கூட இந்தியா ஆதரவு வழங்கியதில்லை.

பட மூலாதாரம், SPUTNIK/MIKHAIL KLIMENTYEV/KREMLIN VIA REUTERS
மோதிக்கும் புடினுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான அத்தனை செய்திகளும் பொய்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இதற்கு மிக சமீபத்திய உதாரணமாக ஜி20 உச்சிமாநாட்டின் புது டெல்லி பிரகடனத்தை சொல்லலாம். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. எனவே ரஷ்யாவுக்கும் அதன் அதிபர்களுக்கு இந்தியா மற்றும் அதன் பிரதமர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அதே சமயம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சமீபத்திய அறிக்கை வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோதியிடம் புதின் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், சீன நாணயமான யுவானில் மட்டுமே இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கப்படும் என்று அவர்கள் அழுத்தம் தருவதாகவும் சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தித்தாள்களில் செய்தி வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளரும் ரஷ்ய விவகாரங்கள் நிபுணருமான வினய் சுக்லா.
“ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, புதின் இந்த வதந்திகள் அனைத்தையும் நிராகரித்துள்ளார். அவர் பிரதமர் மோதியைப் பாராட்டியது மட்டுமல்லாமல், இரண்டு நாடுகளுக்கும் இடையே அவர்களின் தேசிய நாணயத்தின் அடைப்படையில் வர்த்தகம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். தற்போது அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் சில சிக்கல்கள் மட்டுமே உள்ளன, அவையும் விரைவில் அகற்றப்பட்டு இந்திய-ரஷ்ய நாணயங்களில் வர்த்தகம் நடைபெறும்” என்று கூறுகிறார் வினய்.
இதன் மூலம் மோதிக்கும் புதினுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான அத்தனை செய்திகளும் பொய் என நிரூபணம் ஆகியுள்ளது.

பட மூலாதாரம், REUTERS/ALY SONG
2014ம் ஆண்டிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மோதி மற்றும் விளாடிமிர் புதின் வருடாந்திர அடிப்படையில் சந்தித்துள்ளனர்
வருடாந்திர சந்திப்புகள் மற்றும் முக்கிய ஒப்பந்தங்கள்
2014ம் ஆண்டிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மோதி மற்றும் விளாடிமிர் புதின் வருடாந்திர அடிப்படையில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகளின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பல முக்கியமான ஒப்பந்தங்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2014 : பிரதமர் நரேந்திர மோதி முதல்முறையாக பதவியேற்ற பிறகு நடந்த பிரிக்ஸ்(BRICS) மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது புதினிடம் “இந்தியாவின் 125 கோடி மக்களில் யாரிடம் சென்று இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு என்று நீங்கள் கேட்டாலும் அது ரஷ்யா என்று சொல்வார்கள். இந்தியாவின் அத்தனை கடினமான சூழல்களிலும் எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் உடன் இருக்கும் ஒரே நாடு என்றால் அது ரஷ்யாதான்” என்றார் மோதி.
ஜூலை 2015 : 7வது பிரிக்ஸ்(BRICS) மாநாட்டின் போது மீண்டும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். அப்போது சர்வதேச யோகா தினத்தை ரஷ்யா கொண்டாடிய விதம் குறித்து புகழ்ந்து பாராட்டிய பிரதமர் மோதி, தான் இதுவரை யோகா செய்ததில்லை என்றும், வரும் காலங்களில் செய்ய விரும்புவதாகவும் கூறினார். மேலும், ரஷ்யா இந்தியா கலாச்சாரத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்திருந்தார் அவர்.
அதிலிருந்து 5 மாதங்கள் கழித்து டிசம்பர் 2015 அன்று 16வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றார் மோதி. இதில் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அடுத்த 18 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்தது 6 அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த சந்திப்பில், மகாத்மா காந்தியின் கையால் எழுதப்பட்ட டைரியின் ஒரு பக்கத்தை புதினுக்கு பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி. இதற்கு பதிலாக 18ம் நூற்றாண்டை சேர்ந்த வாள் ஒன்றை மோதிக்கு பரிசாக வழங்கினார் அதிபர் புதின்.
அதற்கு பிறகு 2016ம் ஆண்டு, 8வது பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவாவில் நடைபெற்றது. அதில் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு பாதுகாப்பு உள்ளிட்ட 16 ஒப்பந்தங்கள் இரு நாடுகள் இடையேயும் கையெழுத்திடப்பட்டது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 200 கமோவ் ஹெலிகாப்டர்களை கூட்டாக தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது , தவிர நான்கு கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் ஐந்து எஸ் – 400 சூப்பர்சோனிக் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
ஜூன் 2017 : 18வது இந்திய – ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றடைந்தார் பிரதமர் மோதி. அப்போது அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கலாச்சாரம் முதல் பாதுகாப்பு வரை பரவியுள்ளதாக தெரிவித்திருந்தார். வர்த்தகத்தில் தனியார் துறையின் முக்கியத்துவம் குறித்து பேசிய இரு நாடுகளும், 2025ம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலர் முதலீடு என்ற இலக்கை விரைவில் எட்டி விடுவோம் என்று தெரிவித்தன. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் சிரித்து, கைகுலுக்கி, ஒன்றாக நடந்து செல்வது உள்ளிட்ட பல படங்களை உலகமே பார்த்தது.
2018, மே : முதல்முறையாக புதினுக்கும் மோடிக்கும் இடையிலான அலுவல்சாரா சந்திப்பு ரஷ்ய நகரமான சோச்சியில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் மூலோபாய கூட்டணி உலகளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு தவிர்க்கமுடியாத அம்சமாகும் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
செப்டம்பர் 2019 : ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாட்டின் போது மோதியும் புதினும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் மூலோபாய கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்து அவர்கள் பேசிக்கொண்டனர்.
நவம்பர் 2019 – பிரேசில் தலைநகர் பிரேசிலியா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இரண்டு தலைவர்களும் சென்றபோது சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிசம்பர் 2021 : 21வது இந்திய -ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் புதின். கோவிட் பொதுமுடக்கத்திற்கு பிறகு புதினுக்கு இது இரண்டாவது வெளிநாட்டு பயணமாகும். ஜூன் மாதம் தனது முதல் பயணத்தில் ஜெனீவா சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்திருந்தார் அவர்.
இந்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் மொத்தமாக 28 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் அமெரிக்கா எச்சரிக்கையுடன் இருந்த இரண்டு எஸ் – 400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஒப்பந்தம் மற்றும் அமேதியில் ஏ.கே -203 துப்பாக்கிகள் உற்பத்தி போன்ற ஒப்பந்தங்கள் ஆகும். இதில் ஏழரை லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. உலகிலேயே முதன்முறையாக இந்த துப்பாக்கிகள் ரஷ்யாவுக்கு வெளியே தயாரிக்கப்படுவதாக அப்போதுதான் அறிவிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது, இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் இடையில் இரண்டு நாள் சந்திப்பும் நடைபெற்றது.
2022ம் ஆண்டு செப்டம்பர் புதின் மற்றும் மோதி சமர்கந்தில் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது புதினிடம் ‘ இது போருக்கான காலம் அல்ல’ என்று கூறினார் மோதி.

பட மூலாதாரம், Getty Images
அடல் பிஹாரி வாஜ்பாயின் பதவிக்காலத்தில் முதல் முறையாக புதின் இந்தியா வந்தபோது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் உரையாற்றினார்
புதின் – வாஜ்பாய் உறவு
கடந்த 23 ஆண்டுகள் குறித்து பேச வேண்டுமானால், ரஷ்யாவில் விளாடிமிர் புதினின் அதிகாரம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், இந்தியா மூன்று பிரதமர்களை கண்டுள்ளது.
அதில் முதல் பெயர் அடல் பிஹாரி வாஜ்பாய். 1998ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் வாஜ்பாய். 2004ம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அவரது பதவி காலத்தில் முதல்முறையாக 2000மாவது ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வந்தார்.
இந்த சுற்றுப்பயணம் பல காரணங்களுக்காக வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. அப்போது இந்தியாவும், ரஷ்யாவும் மூலோபாய கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கு பின்னால் ஒரு வருடம் கழித்து ரஷ்ய அதிபர் அழைப்பை ஏற்று அடல் பிஹாரி வாஜ்பாய் ரஷ்யா சென்றார்.
இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் இனிமையானது என்று கூறுகிறார் வினய் சுக்லா. இது குறித்து மேலும் பேசிய வினய் , “ஒரு முறை பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மாஸ்கோ வந்து கொண்டிருந்தபோது அவரது விமானம் தரையிறங்கவிருந்த சமயத்தில், வாஜ்பாயை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட புதின், முஷாரப் வருகிறார் என்றும், இந்தியாவின் பிரச்னைகளான தீவிரவாதம் குறித்து அவருடன் பேசப் போவதாகவும் தெரிவித்தார். பின்னர், முஷாரஃப் சந்திப்பு முடிந்து ரஷ்யாவை விட்டு வெளியேறியபோது, தாமதிக்காமல் புதின், வாஜ்பாயிடம் தகவல் தெரிவித்தார், இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படாது என்று புதின் நம்பினார்” என்று அந்த சம்பவத்தை விவரிக்கிறார்.
அதே நேரத்தில், “அடல் பிஹாரி வாஜ்பாய் பதவிக்காலத்தில் முதல் முறையாக புதின், இந்தியா வந்தபோது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் உரையாற்றினார். அதற்கு பிறகு அது போன்ற ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. இந்த சமயத்தில் தான் இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டணி குறித்தான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. எனவே இயல்பாகவே இரு நாடுகளின் வெளியுறவு கொள்கைகளும் கடும் மாற்றம் அடைந்து கொண்டிருந்த காலம் அது” என்று கூறுகிறார் சஞ்சய் பாண்டே.

பட மூலாதாரம், Getty Images
மோதி மற்றும் புடினிடம் காணப்படும் எளியத்தன்மை மன்மோகன் சிங்கிடம் காணப்படவில்லை
புதின் – மன்மோகன் சிங் உறவு
2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் யுபிஏ – 1 மற்றும் யுபிஏ – 2 அரசின் பிரதமராக பொறுப்பேற்றார் மன்மோகன் சிங்.
புடினுடனான மன்மோகன் சிங்கின் நட்பும் சிறப்பானதாகவே இருந்த நிலையிலும் கூட அது அவ்வளவு நெருக்கமானதாக இல்லை என்று நம்புகின்றனர் நிபுணர்கள்.
இது குறித்து பேசும் சஞ்சய் பாண்டே, “ அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருக்கம் அதிகரித்து வந்த சமயம் அது. ஆனால் அதையெல்லாம் மீறி, ரஷ்யா மீதான இந்தியாவின் உறவு அப்படியே இருந்தது. 2010 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையில் சிறப்புரிமை கூட்டாண்மைக்கான ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியது, அதே நேரத்தில் அமெரிக்காவுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், சொல்லும்படியான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை. மற்றொரு புறம், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளும் தொடர்ந்து கொண்டிருந்தது.”
பிரதமர் மோதியின் ஆளுமைத்திறனுக்கும், மன்மோகன் சிங்கின் ஆளுமைத்திறனுக்கும் அதிக வித்யாசங்கள் இருப்பதாக சுட்டி காட்டுகிறார் வினய் சுக்லா.
மோதி மற்றும் புதினிடம் காணப்படும் எளியத்தன்மை மன்மோகன் சிங்கிடம் காணப்படவில்லை. அதே சமயம், அப்போது இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனிப்பட்ட உறவுகளில் கவனம் செலுத்தவில்லை. புதின், மன்மோகன் சிங்கை மதித்த போதிலும் அவரால் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது என்பதையும் அறிந்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சோவியத் யூனியனுடன் வலுவான உறவை வளர்த்து கொண்டது இந்தியா.
இரு தரப்பு உறவுகள்
இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் நீண்டகால மற்றும் ஒத்துழைப்பு நட்பு நாடாக ரஷ்யாவை விவரிக்கிறது.
1950ல் நடைபெற்ற பனிப்போரின் போது, சோவியத் யூனியனுடன் வலுவான உறவை வளர்த்து கொண்டது இந்தியா.
1965ம் ஆண்டு நடைபெற்ற இந்திய – பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்வதில் முக்கிய பங்காற்றியது சோவியத் யூனியன்.1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐநாவில் இந்தியாவிற்கு ஆதரவாக நின்றது சோவியத் யூனியன்.
இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் 1971-ம் ஆண்டு அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜனவரி 1993 இல் சோவியத் யூனியன் உடைந்தபோது, இந்த ஒப்பந்தம் இந்திய-ரஷ்ய நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தமாக மாற்றப்பட்டது.
2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரைன் மீது போர்தொடுத்த போது, ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் தவிர்த்து விட்டது இந்தியா.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, மேற்கத்திய நாடுகள் ராஜாங்க ரீதியாக ரஷ்யாவை தனிமைப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. பல மேற்கத்திய நிறுவனங்களும் கூட ரஷ்யாவில் முதலீடு செய்வதையும் நிறுத்தி விட்டனர், தங்களது நிறுவனங்களையும் கூட அங்கு மூடி விட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் அளவு 113% உயர்ந்துள்ளது.
வணிக உறவுகள்
ரஷ்யாவின் மீது தடைகள் போடப்பட்ட பிறகு, ரஷ்ய எண்ணெயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்தியா அதிக அளவிலான ரஷ்யா எண்ணெய்களை இறக்குமதி செய்தது. காரணம் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் அதிக தள்ளுபடி சலுகைகளை வழங்கியது.
2022 டிசம்பரில், 7 நாடுகளின் குழு ரஷ்ய எண்ணெய்க்கு ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் என விலை உச்ச வரம்பை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் கிட்டத்தட்ட ரஷ்யாவிலிருந்து வரும் அனைத்து எண்ணெய் இறக்குமதிகளையும் தடை செய்தது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் மட்டும் மாஸ்கோவிலிருந்து சீனா மற்றும் இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022 ஜனவரி-செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் மொத்த இறக்குமதி 544,115.27 மில்லியன் டாலராக இருந்தது, இதுவே 2023 ஜனவரி-செப்டம்பர் மாதங்களுக்கு இடையே 4,94,259.43 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஆனால் இதையே ரஷ்யாவின் பக்கம் இருந்து பார்த்தோமானால், 2023 ஜனவரி-செப்டம்பர் மாதங்களின் இறக்குமதியை 2022 ஜனவரி-செப்டம்பர் மாதங்களோடு ஒப்பிட்டால் இந்தியா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் அளவு 113% உயர்ந்துள்ளது.
உலகில் உள்ள 231 நாடுகளில் இருந்து இந்தியா பல்வேறு விதமான பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதில் முதல் ஐந்து இடங்களில் இருப்பது சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளாகும்.
ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை உலகிலேயே பெரிய அளவில் வாங்குவது இந்தியா தான். இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் ஆயுதங்களில் 85 சதவீதம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதியில் 60 சதவீதம் ரஷ்யாவிலிருந்து செய்யப்படுபவை.
கச்சா எண்ணெய் மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து சமையல் எண்ணெய் மற்றும் உரம் ஆகியவற்றையும் இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்த இரு நாடுகளும் தற்போது தங்களது உள்ளூர் நாணயங்களில் (ரூபாய் மற்றும் ரூபிள்) வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளன. ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம்.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் எலிபோவ், சமீபத்தில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை சந்தித்து வர்த்தகம், தொழில்துறை உற்பத்தி, உள்கட்டமைப்பு, கல்வி, குஜராத் மற்றும் பல்வேறு ரஷ்ய மாகாணங்களுக்கு இடையிலான உறவுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்துள்ளார்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய முதலீடுகளுக்கான முக்கிய இடங்களில் ஒன்றாக குஜராத் உள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்