
பட மூலாதாரம், ANI
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டது குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இரண்டு படங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதையடுத்து அவர்கள் மிகுந்த மன தைரியத்துடன் போராட்டக் களத்தில் குதித்தனர். ஆனால், இந்த ஆண்டின் இறுதியில், மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு. அவர்கள் கதறி அழும் நிலை ஏற்பட்டது. அந்த அழுகையின் பின்னணியில் அவர்கள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாகக் கரைந்துவிட்டதாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளரும் புதிய தலைவருமான சஞ்சய் சிங்கின் வெற்றியும், மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு கிடைத்த தோல்வியின் தாக்கமும் விளையாட்டு உலகப் பெண்களின் மனதில் ஏற்கனவே நன்றாகப் பதிவாகியுள்ளது.
விளையாட்டு உலகில் பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்குகள் கடந்த காலத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை என்ற நிலையில், இதுபோன்ற விவாதங்களில் எதிர்காலத்தில் மிகவும் கடினமாகிவிடும் என அஞ்சப்படுகிறது.
இருப்பினும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார், ஜனவரி 2017 முதல் ஜூலை 2022 வரை, பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக 30 பாலியல் புகார்கள் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு வந்துள்ளன என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், DEBLIN
மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்த சாக்ஷி மாலிக், தனது ஷுக்களைக் கழற்றி மேசையில் வைத்தார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் புகார் தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு மட்டுமே உண்மை அல்லது பொய்யை நிரூபிக்கும்.
கடந்த ஜூன் மாதம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த வியாழன் அன்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். அதன் பின் அந்த வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டது, அவர் இப்போது ஜனவரியில் மீண்டும் விசாரணையைத் தொடங்குவார்.
ஆனால் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மல்யுத்தம் மட்டுமல்ல, விளையாட்டு உலகமே பெண்களுக்குப் பாதுகாப்பற்றது என்ற அச்சத்தை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது.
பல பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை நாம் கேட்கும் போது, பெண்களை விளையாட்டு வீரர்களாக்கும் அவர்களின் நோக்கங்கள் பலவீனமடையத் தொடங்கியுள்ளன என்பது தெளிவாகிறது.
அதே சமயம், விளையாட்டுகளை நிர்வகிக்கும் சங்கங்களில் சர்வாதிகாரத்திற்கு சவால் விடுவது மிகவும் கடினம் என்பதும் தெளிவாகிவிட்டது.

பட மூலாதாரம், ANI
பிரிஜ் பூஷன் சரண் சிங்
பா.ஜ.க. எம்.பி. பிடியில் மல்யுத்த சம்மேளனம்
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுடன், சங்கத்தில் தனிநபர் ஒருவரின் ஆதிக்கம் தொடர்பான பிரச்னையையும் மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பினர் என்பதுடன் அரசாங்கத்தின் உத்தரவாதத்திற்குப் பிறகுதான் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மல்யுத்த வீராங்கனைகளின் கூற்றுப்படி, பிரிஜ்பூஷன் சரன் சிங்கின் கூட்டாளிகள் அல்லது அவருடன் தொடர்புடையவர்கள் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
பாரதிய ஜனதா எம்.பி.யாக இருக்கும் பிரிஜ் பூஷண், மல்யுத்த சங்கத்தில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற அவரது நண்பரும், தொழில் கூட்டாளியுமான உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் துணைத் தலைவர் சஞ்சய் சிங் மூலம் பிரிஜ் பூஷனின் ஆதிக்கம் தொடரும் என வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த வினேஷ் பொகாட் இதே கருத்தை வலியுறுத்தினார்.
தேர்தலில் சஞ்சய் சிங் வெற்றி பெற்ற பிறகு, பிரிஜ் பூஷனின் வீட்டில், “சஞ்சய் பாய்யா கியா லே கே சலே, பிரிஜ் பூஷன் கி கடாவு லே கே சலே” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மல்யுத்த சம்மேளனத்திற்கு புதிய முகங்கள் வந்தாலும், பிரிஜ் பூஷனின் பிடியில் அந்த சம்மேளனம் தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கூட்டமைப்பு முன்பு இருந்தது போல் இல்லை.
இம்மாத இறுதியில் கோண்டாவில் 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும். பிரிஜ் பூஷன் சரண் சிங் கோண்டாவில் வசிப்பவர் என்பதுடன், அங்கிருந்து இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI
குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கரைந்துவிட்டதாக மல்யுத்த வீரர்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பஜ்ரங் புனியா, வினேஷ் பொகாட் ஆகியோரும் குட்பையா?
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பது மல்யுத்த வீரர்களின் மற்றொரு கோரிக்கையாகும். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற 15 உறுப்பினர்களில் ஒருவர் கூட பெண் இல்லை.
மல்யுத்த வீராங்கனைகளின் நம்பிக்கையை அவர்கள் எப்படி வென்றெடுப்பார்கள் என்பது சம்மேளனத்தின் முன் உள்ள ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த விளையாட்டு அவர்களுக்கு பாதுகாப்பானது என்றும் அவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தலாம் என்றும் அவர்களுக்கு எப்படி உறுதியளிக்கமுடியும்?
தேர்தலுக்குப் பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது கூட்டாளி வெற்றி பெற்றாலும், தனது போட்டியாளர்களாக விளங்கும் மல்யுத்த வீரர்கள் ‘பழிவாங்கும் அரசியலை’ எதிர்கொள்ளும் நிலை ஏற்படாது என்று கூறினார்.
பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் பொகாட் ஆகியோர் பல சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கங்களை வெல்ல விரும்புகிறார்கள்.
இப்போது அவர்கள் தனது கேரியரை தொடர்வார்களா அல்லது சாக்ஷி மாலிக் போல் மல்யுத்தத்திற்கு குட்பை சொல்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகளாக பெண்கள் தேர்வாகவில்லை என வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
வினேஷ் 53 கிலோ எடையில் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கிறார். இந்த எடையில், 20 வயதான பங்கல் சிறப்பாக செயல்பட்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார்.
மல்யுத்த கூட்டமைப்பை நடத்துவதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்த தற்காலிகக் குழு, ஒதுக்கீட்டில் வெற்றி பெறும் மல்யுத்த வீரர்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று எதுவும் இல்லை என்றும், இருப்பினும் ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெறுபவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மற்றொரு விளையாட்டில் வெற்றிபெறவேண்டும் என்றும் ஒரு கொள்கையை கடந்த மே மாதம் கொண்டு வந்தது.
புதிய மல்யுத்த சம்மேளன நிர்வாகம் கடைசியில் பங்கலை மட்டுமே பாரிஸுக்கு அனுப்பக்கூடும். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், வினேஷின் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் கனவு கனவாகவே இருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், வினேஷுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர் 50 கிலோ எடைப் பிரிவுக்கு திரும்ப வேண்டும் அல்லது தனது எடையை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் 57 கிலோ எடைப் பிரிவில் ஒரு ஒதுக்கீட்டைப் பெற வேண்டும்.
பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை தொடர்ந்தால், அவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஏனென்றால் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 65 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க எந்த இந்திய மல்யுத்த வீரரும் இதுவரை தகுதி பெறவில்லை.

பட மூலாதாரம், INSTAGRAM/ANITASHEORAN_WRESTLER
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரன் 7 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.
ஆச்சரியமான வாக்குப்பதிவு முறை
2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஏழு வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அதே சமயம் சஞ்சய் சிங் 50 வாக்குகளில் 40 வாக்குகளைப் பெற்றார்.
சஞ்சய் சிங்குக்கு ஆதரவாக 40 வாக்காளர்கள் இருக்கும் போது, மூத்த துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான தேர்தலில் அவரது குழுவில் இருந்த வேட்பாளர்கள் எப்படி தோல்வியடைந்தனர் என்பதுதான் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.
அனிதா குழுவைச் சேர்ந்த பிரேம்சந்த் லோச்சப், தேவேந்திர காடியன் ஆகியோர் எளிதாக வெற்றி பெற்றனர்.
இதன் காரணமாக, எதிர்க்கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்ததற்கு பின்னால் ஒருவித அழுத்தம் இருந்ததாகவும், இல்லையெனில் இந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் பல நிபுணர்கள் யூகித்து வருகின்றனர்.
இருந்த போதிலும், 15 பதவிகளில் 13 பேர் பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், எனவே, சஞ்சய் சிங் கொள்கைகளை வகுப்பதில் அல்லது தற்காலிகக் குழு எடுக்கும் முடிவுகளை மாற்றுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளும் நிலை இருக்காது.

பட மூலாதாரம், ANI
மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
புதிய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்தின் முன் உள்ள சவால்கள்
கடந்த 11 மாதங்களாக மல்யுத்த வீரர்கள் மற்றும் மல்யுத்த போட்டியின் ரசிகர்கள் என இருதரப்பும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பெரிய வீரர்கள் மீதான நம்பிக்கையும் சற்று குறைந்துள்ளது.
இந்த வீரர்களை எந்தச் சோதனையும் இன்றி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பியதால் பல மல்யுத்த வீரர்கள் கோபமடைந்துள்ளனர்.
மல்யுத்த சம்மேளனத்தின் முன் இருக்கும் முதல் சவால், வீரர்களின் நம்பிக்கையை வென்று காட்டுவதே ஆகும். இது மட்டுமின்றி இனிமேல் யாரும் பாரபட்சம் காட்டப்பட மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவம் ஒரு சவாலாகவே உள்ளது.
சம்மேளனத்தை தொழில் ரீதியாக நடத்துவதும் முக்கியமானதாக இருக்கும். மல்யுத்த சம்மேளனம் கடந்த முறை பல ஒப்பந்தங்களை வழங்கிய போதிலும் அவை அனைத்தையும் நிறைவேற்றவில்லை. இப்போது இந்த சம்மேளனம் மீண்டும் ஒப்பந்தங்களை வழங்கினால், அவற்றை தொழில்முறையில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
மல்யுத்த போட்டிகளின் போது, வீரர்களின் பயிற்சிக்குத் தேவையான அரங்கம் உள்ளிட்ட பிற அடிப்படைத் தேவைகள் என அனைத்து வசதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மிக முக்கியமாக, இந்த சம்மேளனம் பெண் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பொறுப்பான பதவிகளை வழங்க வேண்டும். இதனால் அவர்கள் வீரர்களுக்கும், சம்மேளனத்துக்கும் இடையிலான இணைப்பாக மாறும் வாய்ப்புகள் உள்ளன என்பதுடன் மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதில் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை சிறப்பாகக் கையாள முடியும்.
(மூத்த பத்திரிகையாளர் அமன்பிரீத் சிங்குடனான உரையாடலின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்