வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர்.

ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். அங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக் கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர். நிகழாண்டு 153-வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நேற்று ( ஜன.24 ) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலை 5 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 7.30 மணியளவில் தரும சாலை அருகே சன்மார்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது.

பார்வதிபுரம் பொதுமக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை சுமந்து, பலவகைப் பழங்கள், சீர்வரிசைப் பொருள்களுடன் ஊர்வலமாக சத்திய ஞான சபை கொடி மரத்தின் அருகே அமர்ந்தனர். பின்னர் பொதுமக்கள் வள்ளலாரின் பாடல்கள் பாடப்பட்டன. பின்னர், வள்ளலாரின் கொடி பாடல்களை பாடியபடி சத்திய ஞான சபையில் சன் மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று ( ஜன.25 ) நடைபெற்றது.

முதல் ஜோதி தரிசனம் 7 திரைகள் நீக்கி காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்காக பக்தர்கள் கலந்து “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி’ என்று முழங்கிய படி ஜோதி தரிசனத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை ( ஜன.26 ) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

விழாவைக் காணவரும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர். சத்திய ஞான சபை வளாகப் பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜா ராம் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர்.

சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து சென்ற பேருந்துகள், கார்கள், வேன்கள் கருங்குழி சாலை பகுதியிலும், கடலூர் மார்க்கத்தில் இருந்து சென்ற வாகனங்கள் ராசாக்குப்பம் புறவழி சாலை பகுதியிலும், விருத்தாசலம் மார்க்கமாக சென்ற வாகனங்கள் மேட்டுக்குப்பம் ஆர்ச் பகுதியிலும், பண்ருட்டி மார்க்கமாக சென்ற வாகனங்கள் வடலூர் ராகவேந்திரா சிட்டி பகுதியிலும் நிறுத்தப்பட்டன. வடலூர் நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப் படவில்லை. பேருந்துகள் நிறுத்தப்பட்ட பகுதிகளிலில் இருந்து வடலூர் நான்கு ரோட்டு பகுதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், எளிதில் சபை பகுதிக்கு செல்லும் வகையில் சரியான ஏற்படுகள் செய்யப்படவில்லை. இதனால், தாங்கள் அலைகழிக்கப்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.



Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *