சக்கரக்கட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரை – நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி பதிவு

சென்னை: ‘ப்ளூ ஸ்டார் திரைப்படம்’ இன்று வெளியாவதையொட்டி நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை சார்ந்துள்ளது படத்தின் கதைக்களம். கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

‘ப்ளூ ஸ்டார் திரைப்படம்’ இன்று வெளியாவதையொட்டி நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சக்கரக்கட்டி முதல் ‘ப்ளூ ஸ்டார்’ வரையிலான இந்த பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்தது. வாழ்க்கை முழுவதும் நினைத்து பார்க்க கூடிய நல்ல நினைவுகளை கொடுத்தது. ‘உங்க வீட்டு பசங்க ஜெயிக்குற படம் தான் ‘ப்ளூ ஸ்டார்’. திரையரங்குக்கு சென்று திரைப்படத்தை பாருங்கள். நிச்சயம் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். ஜெயிக்கிறோம்.” என்று சாந்தனு நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்.