நெப்போலியனுக்குப் பிறகு தங்கள் நாட்டின் பிம்பத்தை உலக அளவில் செழுமைப்படுத்த ஒரு தலைவன் வருவானா என்ற ஏக்கம் பிரான்ஸுக்கு இருந்து வந்தது. அது அதன் ராணுவத் தலைவராக 1917ல் நியமிக்கப்பட்டிருந்த ராபர்ட் நெவில் மூலம் தீரும் என்ற நம்பிக்கை உண்டாகியிருந்தது.
ஆனால் அதே சமயம் பிரான்ஸ் நாட்டு மக்கள் போர் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். பெரிதாக எந்த வெற்றியையும் காணாத, அதேசமயம் லட்சக்கணக்கானவர்களைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கும் நிலை அவர்களை நிலைகுலையச் செய்தது. ரஷ்யாவில் மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த நிலை பிரான்ஸில் உண்டாகிவிடுமோ என்று பிரெஞ்சு அரசு பயந்தது. அதற்கு ராபர்ட் நெவில் ஒரு மருந்தாக விளங்குவார் என்று எதிர்பார்த்தது பிரான்ஸ் அரசு.

ராணுவத் தலைமைப் பதவி ஏற்றவுடன் ராபர்ட் நெவில் தொடர்ந்து பிரான்ஸ் போரில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்தார். முக்கியமாக மேற்கு முனையில் உள்ள ஆர்னே (Airne) நதிக்கரையில் அடுத்த தாக்குதல் என அறிவித்தார். இந்தப் போருக்காக மிக அதிக அளவில் ராணுவ வீரர்களைத் தயார் செய்தது பிரான்ஸ். காரணம் இது தனக்கான கௌரவப் பிரச்னை என்றும் ராபர்ட் நெவில் கருதியதுதான்.
சொம்மா போரில் நேச நாடுகள் செய்த தவற்றை இம்முறை பிரான்ஸ் செய்யவில்லை. ஜெர்மனி ராணுவம் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, அதில் உயிர் தப்பியவர்கள் உடனடியாக பதுங்கு குழிகளிலிருந்து வெளியேறிவிடவில்லை. முடிந்தவரைப் பதுங்கு குழியிலிருந்து கொண்டே பதில் தாக்குதல்களைச் செய்தனர்.
ஆனால் ஜெர்மனி சுதாரித்துக் கொண்டு போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. தரைவழித் தாக்குதலிலும் அது ஒரு உத்தியைப் பயன்படுத்தியது. அங்குப் போரிடத் தயார் செய்யப்பட்ட மொத்த ராணுவத்தையும் உடனடியாக அனுப்பாமல் பிரிவு பிரிவுகளாக அனுப்பியது. ஒரு பிரிவினரோடு போரிட்டு நேச நாடுகளின் தரைப்படை வீரர்கள் களைப்படைந்தபோது புதிய வேகத்துடன் அடுத்த பிரிவினர் சண்டைக்குத் தயாராகினர்.
நேச நாடுகள் தரப்பு பீரங்கிகள் ஜெர்மனிய ராணுவத்தின் தொடக்க வரிசைகளிலிருந்த ராணுவ வீரர்களை மட்டுமே பாதித்தன. ஜெர்மன் தரப்பில் தனியாக அவர்கள் வைத்திருந்த ரிசர்வ் ராணுவம் அடுத்து களம் இறங்கியது. பிரெஞ்சு ராணுவத்தினர் குன்றின் பகுதிகளில் முள்வேலிகளைக் கடந்தபடியும் மிஷின் கன்களை எதிர்கொண்டபடியும் முன்னேற வேண்டியிருந்தது.

ஐந்து நாள்கள்தான் இந்த போர் நடந்தது. அதோடு பிரான்ஸ் அந்தப் பகுதியில் போரை நிறுத்திக் கொண்டு விட்டது. சுமார் 30,000 ஜெர்மன் ராணுவத்தினரைக் கைதுசெய்தது பிரெஞ்சு ராணுவம். ஆனால் தன் தரப்பில் 1,30,000 வீரர்களை அது இழந்திருந்தது. பிரெஞ்சு ராணுவத்தை இது மிகவும் பாதித்தது. அதை விட அதிகமாக பிரான்ஸ் பொதுமக்களை இது பாதித்தது. அவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ராணுவ வீரர்களுக்குப் புதிய வருத்தங்களும் சேர்ந்திருந்தன. உயிரைப் பணயம் வைத்துப் போரிடும் தங்களுக்கான ஊதியம் குறைவானது என அவர்கள் நினைத்தார்கள். ராணுவத் தளபதிகள் தங்களைச் சரியாக வழிநடத்தவில்லை என்றும் அதனால்தான் தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது என்றும் நினைத்தார்கள்.
ஏற்கெனவே புதைந்து கிடந்த இந்த வெறுப்புணர்ச்சி நெவில் தலைமையில் போரில் தோல்வி கண்டபோது பெரும் வேகத்துடன் வெளிப்பட்டது. இது ராணுவ மேலதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை எனும் அளவுக்குச் சென்றது. இது இன்னொரு பிரெஞ்சுப் புரட்சி என்று கூறுபவர்களும் இருந்தார்கள். (1789ல் உண்டான பிரெஞ்சுப் புரட்சியில் பொதுமக்கள் அரசைத் தூக்கி எறிந்தனர். இது பின்னர் நெப்போலியன் அந்த நாட்டுத் தலைவன் ஆவதற்கு வழிவகுத்தது). 1917 கிளர்ச்சியில் அரசைத் தூக்கி எறியும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபடவில்லை என்றாலும் அவர்களது ஒத்துழையாமை இயக்கமே பிரான்ஸ் அரசுக்கு ஒரு பெரிய சவுக்கடியாக இருந்தது. இனி ஜெர்மனி ராணுவத்தை எதிர்கொள்ள மாட்டோம் என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். அர்த்தமற்ற தாக்குதல்களுக்கு தாங்கள் பலியாக மாட்டோம் என்று கூறினர்.
நிலைமையைச் சமாளிக்க ஏதாவது செய்ய வேண்டுமே… ராபர்ட் நெவில் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டார். பிலிப் பெடேன் (Philippe Petain) என்பவர் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார்.

இவர் வெர்டுன் போரில் இரண்டாம் நிலை ராணுவத் தலைவராகக் கலந்து கொண்டவர். (இவருக்கும் கீழ்நிலையில் பணியாற்றிய ராபர்ட் நெவில் இவரைத் தாண்டி முன்னேறி ராணுவத் தலைவர் ஆனது வேறு விஷயம்). இவர் பயன்படுத்திய லாரி போக்குவரத்து சிஸ்டம் (Truck Transport) பெருத்த பலன் அளித்தது. அதாவது போர்க்களத்துக்கு உரியச் சாலை வசதியை ஏற்படுத்தி, தொடர்ந்து லாரிகளை அங்கு அனுப்பி உணவு போன்ற உரியத் தேவைகளை போர்க் களத்தில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பவும், அடுத்த பிரிவு ராணுவ வீரர்களைக் கொண்டு வருவதற்கும், காயமடைந்த வீரர்களைப் போர்க்களத்திலிருந்து காப்பாற்றிக் கூட்டிவரவும் இந்தப் போக்குவரத்து முறை பெரிதும் பலன் அளித்தது. எனவே இவர் ராணுவ வீரர்களின் நண்பராகக் கருதப்பட்டார்.
அவர் ஒரு புறம் கரும்புக் கரத்துடனும் மறுபுறம் இரும்புக் கரத்துடனும் செயல்பட்டார். ராணுவ வீரர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டது. அவர்களுக்கான சலுகைகள் அதிகமாயின. அதேசமயம் தீவிரமாக அரசை எதிர்த்த 55 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.
கூடவே அடுத்த ஆஸ்னே போரைத் திட்டமிடத் தொடங்கியது பிரான்ஸ்!
– போர் மூளும்…
நன்றி
Publisher: www.vikatan.com