
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து கிடைக்காதவர்கள், ‘அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று எஸ்.எம்.எஸ். வந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’ என்று சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல்வர் தொடக்கிவைத்தார். இதன் மூலம் பெண் குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் செப். 18 முதல் அவர்களது மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். வழியே தெரிவிக்கப்பட்டது. மேலும் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் எஸ்.எம்.எஸ். வந்த 30 நாட்களுக்குள் தங்கள் அருகில் உள்ள அரசு இ – சேவை மையங்கள் வழியே விண்ணப்பங்களை மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதோடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் மேல் முறையீடு செய்ய கடைசி நாள் எது என்பதில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பேசிய சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அதிகாரிகள் “விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக எம்.எஸ்.எஸ். எந்த நாளில் வந்ததோ அந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்” என்றனர். இதுவரை 9.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in