`மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டத்தில், தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும், ஏடிஎம் கார்டு வழங்கும் வரை காத்திருக்காமல், உரிமைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான விளக்கத்துடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும்’ என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் `கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை” முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தில், நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள் வீடு தேடி வழங்கப்பட்டு, மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில் இந்தத் திட்டத்திற்கு, 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை முறைப்படி முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள், இத்திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com