தமிழக பட்ஜெட்டில் மக்களிடம் பெருமளவு வரவேற்பைப் பெற்ற திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை. செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் மகளிர், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் இந்தத் திட்டத்தால் பயன்பெற முடியாது. இதனால் நிபந்தனைகளின் கீழ் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக, இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது.


ஜூலை 24 முதல், ஆகஸ்ட் 4-ம் தேதி வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவும், ஆகஸ்ட் 5 முதல்,12-ம் தேதி வரை இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவும் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டதாக அரசு தெரிவித்தது.
இதற்கு மத்தியில், மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்தில் தகுதி வாய்ந்த பெண்களும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்திலுள்ள ஓய்வூதியர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் முன்பு பதிவு செய்யாதவர்களுக்காக ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் `சிறப்பு முகாம்கள்” நடைபெற்றன.
நன்றி
Publisher: www.vikatan.com