மீண்டும் `நீட்’ தேர்வை கையிலெடுக்கும் திமுக! – மக்களவைத்

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாகத்தான் இருக்கும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தி.மு.க சட்டப்போராட்டம் நடத்தும். நீட் தேர்வு ரத்து ரகசியம் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதைச் செயல்படுத்துவோம்”… இதெல்லாம் நீட் தேர்வு குறித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி சொன்ன கருத்துகள். இந்தக் கருத்துகளைச் சொல்லி மூன்று ஆண்டுகள் நெருங்கும் சூழலிலும் எங்கே சென்றாலும் இது தொடர்பான கருத்துகள் உதயநிதியைத் துரத்துவதை அவரால் தடுக்க முடியவில்லை.

இந்த விவகாரம் உதயநிதியின் கெளரவப் பிரச்னையாகவே மாறிவிட்டது என்கிறார்கள் தி.மு.க வட்டாரத்தில். அதனால்தான் அவரும் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவதோடு, தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகிறார். அதன் மற்றொரு கட்டமாக கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். ஐம்பது நாள்களில் களத்திலும், இணையத்திலும் தலா ஐம்பது லட்சம் கையெழுத்து என்ற இலக்கோடு மாணவர் அணி, மருத்துவ அணியை இணைத்துக்கொண்டு இந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள இந்த இயக்கத்தில் இணையத்தில் இதுவரை 1.47 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. களத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்து வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் நீட் கையெழுத்து இயக்கம் என்பது வெறும் நாடகம் எனவும் மக்களை ஏமாற்றும் வித்தை எனவும் அ.தி.மு.க., பா.ஜ.க., நா.த.க உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நீட் கையெழுத்து இயக்கம் என்பது நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியே தி.மு.க கையிலெடுத்திருக்கிறதா அல்லது உண்மையில் நீட் தேர்வை ரத்து செய்யும் அக்கறையின் வெளிப்பாடா என்ற விசாரணையில் இறங்கினோம்.

தி.மு.க தொடங்கியிருக்கும் கையெழுத்து இயக்கம் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணனிடம் பேசினோம். “தி.மு.க தன் அரசின் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இதுபோன்ற மொழி மற்றும் உணர்வு ரீதியிலான பிரச்னைகளைத் தூண்டிவிடுவது இன்று நேற்று நடப்பது அல்ல. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே ஒரு கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னவர்கள் இன்று மக்கள் ஐம்பது லட்சம் கையெழுத்துப் போட்டால் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் எனச் சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்று, மோசடி வேலை. எந்தளவுக்கு மக்களை முட்டாள்களாக இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீட் கட்டாயம் என்பது மத்திய அரசு சொன்னதல்ல. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. பல்வேறு தரப்பின் வாதங்களைக் கேட்டு நீட் வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மத்திய அரசு சில விலக்கு அளிக்கலாம் எனச் சொன்னபோது கூட உச்ச நீதிமன்றம் அதை மறுத்திருக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக ஏதாவது பிரச்னை இருக்குமானால் உச்ச நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். அதைவிடுத்து இப்படி மாணவ, மாணவிகளை ஒருவிதமான பதற்றத்திலேயே வைத்திருக்கும் அரசியலைச் செய்வது மன்னிக்க முடியாத குற்றம். மாணவ, மாணவிகளிடம் நீட் தேர்வு ரத்து செய்துவிடுவோம் என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்கள். இதில், தி.மு.க-வின் அரசியல் சுயநலன் தான் இருக்கிறதே தவிர மாணவர்கள்மீதான அக்கறை துளியும் இல்லை. ” என்றவர்

நாராயணன் திருப்பதி

“நீட் தேர்வு அரசியல், தேர்தல் சார்ந்த விவகாரமாக பா.ஜ.க பார்க்கவில்லை. நீட் தேர்வினால் அரசுப் பள்ளி, கிராமப்புற மாணவர்கள்தான் அதிகளவில் பயனடைந்திருக்கிறார்கள். நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே எந்தவிதமான எதிர்க்கருத்துகளும் இல்லை. தி.மு.க போன்ற அரசியல் கட்சிகள்தான் நீட் வேண்டாம் என்ற சமூகவிரோதக் கருத்துகளைப் பேசிவருகிறார்கள். நீட் தேர்வு குறித்து இவர்கள் என்ன பேசினாலும் அதனால் எந்தவித அரசியல் ஆதாயமும் தி.மு.க-வுக்குக் கிடைக்கப்போவதில்லை. மாறாக மாணவர்களின் வெறுப்பைத்தான் சம்பாதிப்பார்கள்.” என விரிவரித்தார்.

நீட் தேர்வு ரத்து இயக்கம் தொடங்கியதன் நோக்கம் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசனிடம் கேட்டோம். “நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தி.மு.க-வுக்கு இல்லை. தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க-வின் ஏவலுக்குப் பயந்து அ.தி.மு.க-தான் கொண்டு வந்தது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்துச் சட்டப் போராட்டங்களையும் செய்வோம் என்பதுதான் எங்களின் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. ஆனால், அதைத் தங்கள் நோக்கத்துக்குத் திரித்துப் பேசும் அரசியலைத்தான் இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வு தேவையில்லை என நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்ட மசோதாவை தி.மு.க கொண்டுவந்தபோது அதை ஆதரிக்காமல் வெளியேறி, பா.ஜ.க-விடம் அரசியல் ஆதாயம் பார்த்தது அ.தி.மு.க. தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்தது பா.ஜ.க. அதற்குத் துணை நின்றது அ.தி.மு.க. அதனால்தான் பழனிசாமியை இன்றைக்கு வரை பாதம் தாங்கி பழனிசாமி எனச் சொல்கிறார் எங்கள் தலைவர். தி.மு.க – காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் இல்லை என்பது வரலாறும். தமிழ்நாட்டில் மட்டும் 27 மாணவர்களும் 4 பெற்றோரும் இறந்திருக்கிறார்கள். வட மாநிலத்திலும் நீட் தேர்வு மரணங்கள் தொடர்கதையாகியிருக்கிறது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் சண்டித்தனமாக பா.ஜ.க நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வே கூடாது என்பதற்காகச் சட்டப் போராட்டம் நடத்திய தி.மு.க.” என்றவர்

அமுதரசன்

ஆளுநருக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வைத்தோம். அதேபோன்ற சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன் வைப்போம். நாங்கள் சொன்னதுபோல 2024-ல் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதை பா.ஜ.க-வும் அதன் அடிமைகளான அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளும் பார்க்கத்தான் போகிறார்கள்” எனப் பதிலளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *