சாதிவாரி கணக்கெடுப்பைக் கையிலெடுக்கும் காங்கிரஸ்… 2024

பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இதே கோரிக்கை பல மாநிலங்களிலும் எழுந்திருக்கிறது.

நிதிஷ் குமார்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதில், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் குறித்து விரிவாக விவாதம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகள், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. காங்கிரஸ் கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

ராகுல் காந்தி

மத்திய பா.ஜ.க அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அல்லது, ஆட்சியைவிட்டுச் செல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நான்கு முதல்வர்களில் மூன்று பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், பா.ஜ.க-வின் 10 முதல்வர்களில் ஒருவர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஓ.பி.சி பிரிவு மக்களுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை” என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டை மத்தியில் ஆளும் பா.ஜ.க எடுத்திருக்கும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் தீவிரமாக ஆதரித்துவருகிறார்கள்.

சச்சின் பைலட்

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், “ராஜஸ்தானில் எங்கள் கட்சியின் முக்கியக் குழுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கான உத்தரவையும் ராஜஸ்தான் அரசு பிறப்பித்திருக்கிறது. தற்போது, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது” என்றார்.

காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், இந்தியா கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஓ.பி.சி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற பிரசாரத்தையும் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இந்த விவகாரம், வரும் ஐந்து மாநிலத் தேர்தல்களில், எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் விவாதித்துவருகிறார்கள்.

மோடி, ராகுல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் நம்புகின்றன. சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ.க எடுத்திருக்கும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு மக்களை சாதிரீதியாகப் பிளவுபடுத்தும் என்ற ரீதியில் பிரதமர் மோடி பேசிவருகிறார். இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பாக, முதன்முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற விவாதம் எழுந்தபோதும், ‘அது மக்களைப் பிளவுபடுத்தும்’ என்ற வாதத்தை ஒரு தரப்பினர் முன்வைத்தனர். இப்போதும் அது நடக்கிறது.

எனவே, ‘சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று சொல்வதன் நோக்கமே, நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஓ.பி.சி மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிவிடக் கூடாது என்பதுதான்’ என்று எதிர்க்கட்சிகள் சாடிவருகின்றன. இனி, சாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது… தவிர்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

மல்லிகார்ஜுன கார்கே

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்டிருப்பது மத்திய பா.ஜ.க அரசுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துவருகிறது. 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று சட்டரீதியாகச் சொல்லப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. எனவே, மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன. எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். அப்படியான சூழலில், பா.ஜ.க அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *