நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு ஆலோசனை கூட்டங்கள், மாவட்டச் செயலாளர் கூட்டங்களை நடத்தி வருகிறது பன்னீர் தரப்பு. அந்த வரிசையில், அண்மையில் சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில் மா.செ-க்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார் பன்னீர். கூட்டத்தில் நடந்தவைகள் குறித்து விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி முறிவால் பன்னீர் தரப்பு குஷியாகிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் என்னசெய்வதென தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த கூட்டணி முறிவு விடியலை கொடுத்திருக்கிறது. பா.ஜ.க – அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தேர்தலை சந்தித்துவிடலாம் என பன்னீர் தரப்பு கணக்கு போடத் தொடங்கிவிட்டது. ஆகவே தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்டச் செயலாளர் கூட்டங்களை நடத்தி வருகிறார் பன்னீர். அண்மையில் நடந்த மா.செ-க்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி மற்றும் அமைப்பு ரீதியாக கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.
நம்மிடம் பேசிய தலைமைக்கு நெருக்கமான சிலர், “ கூட்டம் தொடங்குவதற்கு முன் தனது அணியின் முக்கிய பிரமுகர்கள் பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிடட நிர்வாகிகள் மத்தியில் பேசினால் பன்னீர்.
`நீதிமன்ற தீர்ப்புகளெல்லாம் இருக்கட்டும், மக்கள் மன்றத்தில் நம்மை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது, அதற்கான வேலைகளை தற்போதிருந்தே தொடங்க வேண்டும்’. என்றிருக்கிறார். பின் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் தேர்தலை சந்திக்க ஏதுவாக பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை ஒருவாரத்தில் தொடங்கவும், ஐ.டி விங் உள்பட நமது அணிக்காக நிரப்பபடாத பல்வேறு பிரிவுகளையும் தயார் செய்திட ஆணையிட்டிருக்கிறார் பன்னீர். குறிப்பாக தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதத்தில் கோவை கொடிசியா மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி தொண்டர்களை திரட்டி மாநாடு நடத்திடவும் முடிவாகியிருக்கிறது” என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி முறிவை கச்சிதமாக பயன்படுத்தி பா.ஜ.கவுடன் தேர்தலை சந்தித்து பெரும் வெற்றிகளை பெறாவிட்டாலும், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என கருதுகிறார் பன்னீர். அதேசமயம், பன்னீர் தரப்புக்கு இருக்கும் பிரச்னையே களத்தில் மக்கள் ஆதரவு பெருவாரியாக இல்லை. மக்களை தன்பின்னால் ஒருங்கிணைக்க பன்னீர் இன்னுமே போதிய முயற்சிகளை எடுக்கவில்லை. இப்போது மாநாடு அறிவித்ததைபோல்தான் புரட்சிப் பயணத்தை அறிவித்தார் அது அறிவிப்போடு நின்றுவிட்டதே.
இப்போதைய அறிவிப்புகளாவது நடைமுறைப் படுத்தப்படுமா, பன்னீரின் வியூகங்கள் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்கள்.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர், “பன்னீர் தனிமரமாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. அவரிடம் கட்சியும் இல்லை, தொண்டர்களும் இல்லை. மக்கள் மன்றத்திலும் நன்மதிப்பும் இல்லை. சொல்லப்போனால் ஆளில்லாத டீக்கடையில் ஆர்வம் குன்றாமல் டீ ஆற்றுகிறார். இருப்பைக் காட்டிக் கொள்ள இப்படி எதையாவது அறிவிப்பார். பின் மழை, வெள்ளம், புயல் வருகிறதென அவரே அதை ரத்து செய்வதாகவும் அறிவிப்பார்” என்றனர் கிண்டலாக.
நம்மிடம் பேசிய பன்னீர் அணியின் தேர்தல் பிரிவு செயலாளர் சுப்புரத்தினம், “ தேர்தலுக்கு ஆயத்தமாகவே மா.செ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அம்மாவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்பதால் நாடாளுமன்ற தேர்தலில் நாம் இடம்பெறப்போகும் கூட்டணி நிச்சயம் வெல்லும். அதை பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றார் சுருக்கமாக!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com