ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன. ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட 35 பேர் காங்கிரஸில் இணைந்ததே, காங்கிரஸ் கட்சிக்கு அங்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதைக் காண்பித்தது.
இந்த முறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சுனில் கனுகோலு, தெலங்கானாவிலும் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தெலங்கானாவில் தேர்தல் பரபரப்பு தொடங்கியவுடன், பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது. அதில், ‘பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், ஓர் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு ரூ.15,000, விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.12,000, மாதம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம், ரூ.4,000 முதியோர் உதவித்தொகை’ ஆகியவை உட்பட ஆறு முக்கிய வாக்குறுதிகளை சோனியா காந்தி அறிவித்தார். அது, தெலங்கானா வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com