வலுக்கும் காவிரி பிரச்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில்

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே காவிரி நதி நீர் பிரச்னையைக் கையிலெடுத்தார் கர்நாடகா துணை முதல்வரும், மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது, மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டியே தீருவோம் என்று அடாவடியாக அவர் பேசிவருகிறார்.

காவிரி

அவரைப் போலவே, காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராகவே தொடர்ந்து பேசிவருகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா. தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு சேமித்து வைக்காமல், தமிழ்நாட்டின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையா கூறியிருக்கிறார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 86-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியம், பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

காவிரி நீர்

காணொலி வாயிலாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற‌ தமிழ்நாடு அரசின் அதிகாரிகள், ‘விநாடிக்கு 5,000 கனஅடி என்ற அளவில் தமிழ்நாட்டுக்கு 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு செப்டம்பர் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆனால், கர்நாடக அரசு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிட‌வில்லை. அதனால், தமிழகத்தில் பயிர்கள் கருகியுள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் கடுமையாக பாதிக்க‌ப்பட்டிருக்கிறார்கள். எனவே, நிலுவையிலுள்ள 44 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய கர்நாடக நீர்வளத் துறை செயலர் ராகேஷ் சிங், ‘காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து அரசியல் செய்கிறது’ என்று குற்றம்சாட்டினார். அதையடுத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர் இருப்பு, திறக்கப்பட்ட நீர், தேவைப்படும் நீர் அளவு ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு பேசிய காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா, ‘தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

சித்தராமையா

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகா அரசு, காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எப்படி மதிக்கும்? ‘குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தமிழ்நாட்டின் பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட முடியாது’ என்கிறது கர்நாடகா அரசு. கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. இருப்பில் இருந்த தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டிருக்கிறோம். எஞ்சியுள்ள தண்ணீரை கர்நாடக‌ விவசாயிகளின் பாசன தேவை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களின் குடிநீர் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்’ என்கிறார்.

மேலும், ‘கர்நாடக அரசைப் பொருத்தவரை குடிநீருக்குத்தான் முன்னுரிமை அளிப்போம். தற்போதைய நீர் இருப்பு குடிநீர் பயன்பாட்டுக்குப் போதுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தமிழ்நாட்டின் பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட முடியாது. இதைகாவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்போம்’ என்கிறார் சித்தராமையா.

ஏற்கெனவே, கர்நாடகாவில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து காவிரி விவகாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது கர்நாடகா அரசு. அதில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்று சித்தராமையா அரசு பதவியேற்றது. அந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்ட நேரத்தில், காவிரி விவகாரம் குறித்து அந்த மாநில அரசிடம் பேசுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, பதவியேற்பு விழாவுக்குத்தான் செல்கிறேன் என்று அவர் பதிலளித்தார். அரசியல் வேறு, மாநிலத்தின் பிரச்னை வேறு என்கிற முதல்வரின் நிலைப்பாடு அவரது பதிலில் வெளிப்பட்டது.

மத்தியில் இருக்கும் பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் காங்கிரஸும் தி.மு.க-வும் கைகோத்திருக்கும் நிலையில், காவிரி பிரச்னையால் இரு கட்சிகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எழும் சூழலைப் பொறுத்து வேண்டுமானால் நிலைமை மாறலாம். அதே நேரத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் காட்டும் தீவிரத்தை தமிழக அரசு காட்டாமல் அமைதி காப்பதை எதிர்க்கட்சிகள் ஆயுதமாக்கும் திட்டத்தில் இருப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது.!

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *