தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய நான்கு முக்கிய அணைகள் இருக்கின்றன. ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி மொத்த இருப்புக் கொள்ளளவான 114.671 டிஎம்சி-யில் 93.535 டிஎம்சி (82%) நீர் இருப்பு இருக்கிறது. எனவே, பிலிகுண்டுலுவிலிருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீரை, கர்நாடகம் திறந்துவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடகா, “தென்மேற்குப் பருவமழை போதுமான அளவுக்குப் பெய்யவில்லை. இதனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருக்கிறது. மேலும், எங்களுக்குக் குடிநீர்த் தேவை இருக்கிறது. எனவே, தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்” என வாதிட்டது. பின்னர் ஒழுங்காற்றுக்குழு கர்நாடகாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட அணைகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில், ‘கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர்வரத்தின்படி, ஆகஸ்ட் 9-ம் தேதி 42.54%, ஆகஸ்ட் 27-ம் தேதி 51.22% நீர்வரத்துப் பற்றாக்குறை இருக்கிறது’ எனக் கணக்கிட்டது
இதையடுத்து, “விநாடிக்கு 14,200 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும்” என தமிழக அரசு தெரிவித்தது. இதுவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 29-ம் தேதி காவிரி மேலாண்மைக் கூட்டம் நடைபெற்றது. அதில், “தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரை 15 நாள்களுக்குத் திறந்துவிட வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. ஆனால் அதையும் முறையாக அவர்கள் வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகிறார்கள்.

இதற்கிடையில் கர்நாடக அரசு சார்பில் அனைத்துக் கட்சி சிறப்பு அவசரக் கூட்டம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு மாநில முதல்வர் சித்தராமையா தலைமை வகித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. இதுவரை இருப்பில் இருந்த நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டிருக்கிறோம். எஞ்சியுள்ள நீரைக்கொண்டே கர்நாடக விவசாயிகளின் பாசனத் தேவை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களின் குடிநீர்த் தேவை ஆகியவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டும். கர்நாடக அரசைப் பொறுத்தவரை இதற்குத்தான் முதல் முன்னுரிமை.
தற்போதைய நீர் இருப்பு குடிநீர் பயன்பாட்டுக்குப் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. குடிநீருக்குச் சேமித்துவைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீரைத் திறந்துவிட முடியாது. இதை காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்போம். தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை. எனவே, தண்ணீர் திறந்துவிட முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட இந்தக் கூட்டத்தின் மூலம் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

தண்ணீர் தரக் கூடாது என அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ஆனால், தண்ணீரைப் பெறுவதற்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு தமிழக அரசு தயங்கிவருகிறது எனப் பலரும் குற்றம்சாட்டிவருகிறார்கள். இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி ஒழுங்காற்றுக்குழுவில் 15 நாள்களுக்கு 5,000 கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே, கர்நாடக அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
அவர்கள் தமிழக அரசுக்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்பதைவிட, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு என்ன பதில் சொல்கின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும். அதன் பின்னர், எங்களுக்கு இருக்கும் கடைசி முடிவு, உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான். வரும் 21-ம் தேதி காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாக, கர்நாடக அரசின் முடிவு தெளிவாகத் தெரிந்துவிடும். அந்த முடிவையும் வழக்கில் இணைத்து, தமிழக அரசு சார்பில் வாதிடப்படும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. அதற்காகக் கூட்டக் கூடாது என்பதல்ல. வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதைப் பார்த்துவிட்டு, வேண்டுமென்றால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். எனவே, அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்டவேண்டிய தேவை இல்லை. உச்ச நீதிமன்றமே ஒரு குழுவை நியமித்து, கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு ஆணையிடலாம்” என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், “காவிரி விவகாரத்தில் அம்மாதான் முதலில் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றார். அதன் பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. எனவே, முதல்வராக இருந்த எடப்பாடி அப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டது. அதுவும் அ.தி.மு.க அரசின் வெற்றி. 10 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இதற்காகச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டியிருக்கிறோம். ஆனால், காங்கிரஸுடன் கூட்டணியில்தான் தி.மு.க இருக்கிறது. அவர்களிடம் முறையான உரிமையைப் பெற முடியாமல் இருக்கிறார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இடங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வந்துவிட்டீர்கள். எனவே, தமிழகத்தில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என்றால் தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று கேட்க வேண்டியதுதானே… அப்படிச் செய்து கூட்டணி, சீட்டு என்ற முடிவுக்கு உங்களால் ஏன் வர முடியவில்லை… தமிழகத்தில் ஜீவாதாரப் பிரச்னையைவிட தேர்தல்தான் உங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆட்சி அதிகாரம்தான் பிரதானமாக இருக்கிறது. மக்கள் நலன் என்று வாயில்தான் கூறுகிறீர்கள். பிரதமரைத்தான் உங்களுக்கு பிடிக்கவில்லையே… பிறகு எதற்கு அவருக்குக் கடிதம் எழுதுகிறீர்கள்,,. சோனியா, ராகுலிடம் சொல்லவேண்டியதுதானே?” என கடுப்பானார்.
மேலும் பாமக உள்ளிட்ட கட்சிகளும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com