தர்மன் சண்முகரத்னம்: சிங்கப்பூர் அதிபர் தேர்தல் ரேஸில்

உலக அளவில் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழரகள், இப்போது பல நாடுகளில் அரசியலிலும் ஆளுமை செலுத்தி வருகின்றனர். அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் போன்றோரும் பதவி வகித்து வரும் நிலையில், தற்போது தமிழர்களுக்கு நெருங்கிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தேர்தலுக்கு தமிழரான தர்மன் சண்முகரத்னம் போட்டியிடவுள்ளார்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். இதனையடுத்து புது அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில், தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் மூன்று பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் வரும் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில், சுமார் 27 லட்சம் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பத்து நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

அதிபர் ஹலிமா

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த, அறுப்பத்தாறு வயது தர்மன் சண்முகரத்னம், கடந்த 2001-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இத்தொகுதியிலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி 22 ஆண்டு அரசியல் பயணத்தில் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

2019-ல் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைகள் வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார். இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதோடு, மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். அதோடு, தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் துறந்துள்ளார்.

இதனிடையே, ‘தர்மனின் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கும் பேரிழப்பு’ என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன், தர்மன் சண்முகரத்னம்

வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தர்மன் சண்முகரத்னம், “சிங்கப்பூரில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் கண்ணியமான, கௌரவமான ஒரு பிரசாரத்தை எதிர்நோக்குவோம். அது நம்மை பிரிக்காது. நியாயமான, அதிக இரக்கமுள்ள மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை நான் நம்புகிறேன். என் வாழ்க்கை அதற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் நாம் எதிர்கொள்ளும் கடினமான மற்றும் சவாலான எதிர்காலம் இதுவாக இருக்கும். அதற்காக தேசிய, சர்வதேசிய அளவில் எனது அனைத்து அனுபவங்களையும், திறன்களையும் வழங்குவதற்காக இந்த போட்டியில் நுழைந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்ற இரு போட்டியாளர்கள் யார்?

இங் கொக் சொங் கடந்த 1970-ஆம்ஆண்டில் சிங்கப்பூர் அரசின் நிதியமைச்சக முதலீட்டு ஆய்வாளராகப் பணியை தொடங்கினார். கடந்த 2007-ஆம் ஆண்டில் ஜிஐசி என்றழைக்கப்படும் சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவியேற்றார். கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அந்த பதவியை வகித்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பர் ஆவார். மற்றொரு வேட்பாளர் டான் கின் லியான் சுமார் 30 ஆண்டுகள் என்டியுசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தார்.

இதற்கிடையே, ‘அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தனக்கு ஒரு கடுமையான போட்டியாளராக விளங்குவார். தர்மன் சண்முகரத்னம் போன்ற மூத்த அதிகாரிகளுடன் தான் போட்டியிடுவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் சக போட்டியாளரான டான் கின் லியான் தெரிவித்துள்ளார்.

டான் கின் லியான், தர்மன் ,இங் கொக் சொங்,

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் இருக்கிறார். சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்றவர் என்பதால் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற 2 வேட்பாளர்களும் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *