ஹாக்கி, கிரிக்கெட் போட்டிகளைத் தவிர்த்து, இதர விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்காகவும், அதன்மூலமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்களை தயார் செய்வதற்காகவும் “கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 17 வயதுக்கு கீழானவர்கள், 21 வயதுக்குக் கீழானவர்கள் என இருபிரிவாகத் தேர்ந்தெடுத்து, 2018-ம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 21 வயதுக்குக் கீழானவர்களுக்கான ‘கேலோ இந்தியா’ போட்டிகள், தமிழகத்தில் வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி என பல்வேறு ஊர்களிலும் நடைபெறும் இந்தப் போட்டிகளில், சுமார் 5,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சென்னையில் நடைபெறவுள்ள ‘கேலோ இந்தியா’ போட்டியின் தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்திட தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அந்த விழாவுக்கு பிரதமரை அழைப்பதற்காகத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரைச் சந்தித்திருக்கிறார். இன்று, ஜனவரி 4-ம் தேதி மதியம் பிரதமரும் உதயநிதியும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, தமிழக விளையாட்டுத்துறையைச் சேர்ந்த சீனியர் அதிகாரிகளும் உடனிருந்துள்ளனர்.
அந்தச் சந்திப்புக் குறித்து விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “அமைச்சர் உதயநிதியை, ‘ஆவோ பேட்டா’ என இன்முகத்துடன் வரவேற்றார் பிரதமர். விழாவுக்கான அழைப்பிதழை பிரதமரிடம் வழங்கிய உதயநிதி, ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை நீங்கள்தான் தொடங்கிவைத்தீர்கள். அதுபோல, ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியையும் நீங்கள்தான் தொடங்கி வைக்க வேண்டும். அவசியம் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்’ என அழைப்புவிடுத்தார். அழைப்பிதழைப் படித்துப் பார்த்த பிரதமர், அவசியம் வருவதாக உத்தரவாதம் அளித்ததோடு, முதல்வரின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com