தி.மு.க ஊழல் பட்டியல் என்கிற பெயரில் `எக்ஸ்` தளத்தில் சமீப நாள்களாக சில காணொளிகளை வெளியிட்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாகவும் இது என்ன மாதிரியாக தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றிய விசாரணையில் இறங்கினோம்.

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு ஏப்ரலில் `தி.மு.க ஃபைல்ஸ்’ என்ற பெயரில் சில ஆவணங்களையும் காணொலிகளையும் வெளியிட்டு இது தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்றார். பிறகு ஜூலையிலும் அப்படியான காணொளிகள் வெளியாகின. தற்போது 2ஜி விசாரணையின்போது தி.மு.க பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் சிலரோடு பேசும்படியான ஆடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “முதலில் 2-ஜி என்பதே முடிந்துபோன ஒரு விவகாரம். நீதிமன்றமே `விடுதலை’ என தீர்ப்பு வழங்கிய ஒன்றை தோண்டி எடுத்துவந்து தி.மு.க-வை களங்கப்படுத்த முயல்கிறார் அண்ணாமலை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தி.மு.க-வினர் பேசுவதுபோல் எதையாவது வெளியிட்டால் அப்படியே நம்புவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. இதுவரை அண்ணாமலை வெளியிட்டதாக சொன்ன போலி ஆவணங்கள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அவ்வளவு ஏன் பா.ஜ.க-வின் எந்தவொரு மூத்த நிர்வாகிகளாவது அதுபற்றி பேசுகிறார்களா என்றால்… இதனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. மக்கள்நலன் சார்ந்த செயல்படும் தி.மு.க-வை போலி ஆவணங்களை கொண்டு களங்கப்படுத்தும் முயற்சியில் மீண்டுமொருமுறை பரிதாபமாக தோற்றுப் போயிருக்கிறார். அறமற்ற அரசியலை முன்னெடுக்கும் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அவரே தினம்தினம் முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்றார் காட்டமாக.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் “பொதுவாகவே அரசியல் தலைவர்களுக்கு நம்பகத்தன்மை மிக அவசியம். அதிலும் ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறேன் என்றால் உரிய ஆதாரங்களே அடிப்படை. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட்ட முதல் ஊழல் பட்டியலால் என்ன தாக்கத்த்தை ஏற்படுத்தமுடிந்ததென்றால் எதுவுமே இல்லை.

அண்ணாமலையை அவதூறு வழக்கு போட்டு நீதிமன்றத்துக்கு தி.மு.க இழுந்தபோது அவரால் போதிய ஆதாரங்களை நீதிமன்றங்களில் சமர்பிக்க முடியவில்லை. இதே கதிதான் இரண்டாவது பட்டியலுக்கும், இப்போது சில காணொலிகள்… முதலில் என்னவென்ற மக்களுக்கு அது என்னவென்றே புரியவில்லை. எந்த தருணத்தில் பேசுகிறார்கள். அவர்கள் பேச்சில் என்ன தவறுகள் இருக்கின்றன என எதுவுமே புலப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஊழல் குற்றசாட்டுகளை அள்ளி வீசும் ஒருவருக்கு நிரூபிக்கும் பொறுப்பும் இருக்கிறது.. நிரூபிக்கிறாரா என்பதே அண்ணாமலை முன்னிற்கும் கேள்வி” என்றனர் விளக்கமாக
நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் எஸ்.ஆர் சேகர் “தொடர்குற்றம் புரிபவர்கள் எவரும் தான் செய்வதை குற்றம் என ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களது குற்றத்தை மற்றவர்கள் சுட்டுக் காட்டினால் சாதாரண மனிதனுக்கு இருக்கும் சூடு, சொரணை, வெக்கம், மானம் என எதுவுமே இருக்காது. அப்படித்தான் தி.மு.கவும். தொடர் குற்றம் புரிபவர்கள்தான் தி.மு.ககாரர்கள்.

அண்ணாமலை வெளியிட்டுவரும் ஆதாரங்களுக்கு தி.மு.க-வினரின் எதிர்வினையை பார்த்தாலே எவ்வளவு அச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். மற்ற எந்த தலைவர்களை போல் இல்லாமல் அண்ணாமலை ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் ஆபிசர். எந்த மாதிரியான எல்லைக்குள் வந்தால் அது குற்றம் என்றும், எந்ததெந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்பதையெல்லாம் அணுஅணுவாக தெரிந்து அனுபவம் பெற்றவர். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ போல் பேசாமல், போகிற போக்கில் எதையாவது பேசுவது போன்ற நபர் அல்ல அவர். அதனால் அவர் வெளியிட்டிருக்கும் குற்றசாட்டுகள் நீதிமன்றத்தின் முன்னால் நிரூபிக்கப்படும். மக்கள் மன்றத்தில் இதன்மீது பெரும் தாக்கம் எழும் அதனை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கண்கூடாக பார்க்கலாம்” என்றனர்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com