தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடக்கும் மாநிலத் தேர்தல்கள் என்பதால் இதுவொரு அரையாண்டு தேர்வாகவே பார்க்கப்படுகிறது. இதில் ஒருவேளை பா.ஜ.க தோல்வியை தழுவினால், பா.ஜ.க-வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் எனும் கேள்வி எழுகிறது.

தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் இடத்தில் இல்லை, ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.கவுக்கு காங்கிரஸுக்கும் கடும் போட்டி நிலவுகிறது, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் பா.ஜ.க-வுக்கு இந்த 5 மாநிலத் தேர்தல் பின்னடைவை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படி பின்னடைவை சந்தித்தால் அது நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள் உள்ளன, எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக விமர்சிக்க தொடங்கும். 5 மாநிலத் தேர்தல் பா.ஜ.க-வுக்கு சறுக்கலை கொடுத்தால் ப்ளான் ’பி’யை கையிலெடுக்கும் வாய்ப்புகள் உண்டு என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் “ஒருவேளை பா.ஜ.க தோல்வியடைந்தால்,பல்வேறு யுக்திகளை மேற்கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முதலில் மாநில அரசியல் வேறு, மத்திய அரசியல் வேறு என்பதை அழுத்தமாக பதிவு செய்வார்கள். தோல்விக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் கவர்ச்சிகரமானதாக மாற்றப்படுவதோடு, மாநில அளவில் வெற்றிபெற்ற அரசின் திட்டங்களை நாடுமுழுக்க நிறுவிடும் அறிவிப்புகளை செய்யலாம். இந்தியா கூட்டணிக்கு எதிரான விவகாரங்களையும் கூர்மைப்படுத்தும் வேலைகளில் இறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்” என்றார்.

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “பா.ஜ.க-வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டால், தேர்தல் நோக்கிய அவர்களது பயணம் ஆக்ரோஷமாக இருக்கும். மாநில அளவிலும் மத்திய அளவிலும் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணிகளையும் உடைக்கும் வேலைகள நிச்சயம் செய்வார்கள். குறிப்பாக `இந்தியா` கூட்டணி கட்சிகளை சிதற வைக்கும் வேலைகளை தொடங்குவார்கள். மறுபுறம் மாநில அளவில் வலிமையான கட்சியுடன் கூட்டணி அமைக்க முயல்வார்கள். மேலும் அவர்களுக்கு உரித்தான இந்துத்துவா அரசியலையும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பயன்பாட்டு பொருட்கள் விலையை அதிரடியாக குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்” என்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சிந்தன், “முதலில் பா.ஜ.க-விடம் பிளான் ’ஏ’ இருப்பதாகவே தெரியவில்லை. பிறகு எப்படி பிளான் ’பி’ இருக்கும். மக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்காத பொறுப்பில்லாத ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க என்ன யுக்தியை கையிலெடுத்தாலும் அவர்களுக்கு தோல்வி மட்டுமே மிஞ்சும். அப்படி தோற்றால் பா.ஜ.க உக்கிரமாக ரெய்டு அரசியலை மேற்கொள்வார்கள் என சிலர் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் இப்போதே அதைதானே செய்து கொண்டிருக்கிறார்கள். மத ரீதியான பிரசாரங்களை கையிலெடுத்து பிரித்தாளும் சூழ்ச்சியையே கொள்கையாக வைத்து செயல்படுகிறது பா.ஜ.க. இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மாநிலத் தேர்தல்களிலும் சரி, நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, பா.ஜ.க-வுக்கு பின்னடைவுதான்” என்றார் காட்டமாக.

நம்மிடம் பேசிய தி.மு.கவினர் சிலரோ, “தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கு செல்லும் கட்சி பா.ஜ.க. பஞ்சாப் மாநில தேர்தல் வந்தபோது, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றார்கள், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் வந்தபோது பொதுப்பிரிவில் பொருளாதாரர் ரீதியாக பிந்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தார்கள்.
இப்படி வாக்குகளை பெற திட்டங்கள் எதையாவது அறிமுகப்படுத்துவதும், திரும்பபெறுவமாக அறிவிப்புகள் இருக்கும். எதிர்க்கட்சிகள்மீதும் தங்களோடு வரமறுக்கும் கட்சிகளின்மீது ரெய்டு நடத்தி ஊழல் முத்திரை குத்தும் வேலைகளிலும் பா.ஜ.க ஈடுபட்டாலும் ஆச்சரியத்துக்கில்லை. ஆனால் எதை செய்தாலும் மக்கள் இம்முறை நிச்சயம் பா.ஜ.க-வை புறக்கணிப்பார்கள்” என்றனர்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க-வினரோ, “முதலில் இதுபோன்ற பேச்சுக்கு இடமில்லை. தெலங்கானா, மிசோராம் தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் எளிதாக வென்று மூன்றாவது முறை ஆட்சி அமைப்போம். அப்படி ஒருவேளை 5 மாநிலத் தேர்தல்களின் பின்னடைவு ஏற்பட்டாலும் அது நாடாளுமன்ற தேர்தலில் எடுபடாது, 2019-ல் மாநிலத் தேர்தல்களில் பின்னடைவைத்தான் சந்தித்தோம், அதற்கென நாடாளுமன்றத்தில் தோற்றுவிட்டோமா?” என வினவினார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com