முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் ஒரு பகுதி தான் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமும் என்கிறது, தமிழக அரசு.


இதேபோல் மக்களைத் தேடி மேயர் திட்டம், இன்னுயிர் காப்போம் என பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக சம்மந்தப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?, திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை முழுவதுமாக தீர்வு வழங்கப்பட்டிருக்கிறதா?, ஏற்கெனவே மக்களை களத்துக்கு சென்று சந்திக்கும் திட்டங்கள் அதிகம் இருக்கும் பொழுது மீண்டும் ஏதற்கு ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் என்ற கேள்வியும் எழுகிறது.


இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக அரசு கொண்டுவந்த இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், கள ஆய்வில் முதல்வர், மக்களைத் தேடி மேயர் திட்டம் போன்றவை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை காப்பியடித்து செயல்படுத்தப்பட்டது. அவற்றின் நிலை தற்போது காற்றில் கரைந்த கற்பூரம் போல இருக்கிறது. அந்தவகையில் தற்போது உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். முந்தைய திட்டங்களை போலதான் இதுவும் இருக்கும். எதையும் முறையாக செயல்படுத்தும் திறன், அவர்களுக்கு இல்லை. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் மக்களை ஏமாற்றுவதற்கு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இதனால் விளம்பரம் கிடைக்குமே தவிர பொதுமக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது” என கொதித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com