“நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்குவது தேர்தல் நாடகம் என்கின்றனவே எதிர்க்கட்சிகள்?”
“2010-ல் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனபிறகு, அடுத்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? இதற்கு முன்பு இதற்கான மசோதா கொண்டு வரப்பட்டபோது, தடையாக இருந்தவர்கள் பலர் இன்றைக்கு I.N.D.I.A கூட்டணியில்தான் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி.-யை கொண்டுவர காங்கிரஸ் நினைத்தது, பா.ஜ.க செய்தது, அதுபோல மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவையும் நிறைவேற்றி இருக்கிறார் பிரதமர் மோடி. நிச்சயம் வழங்குவார்.”

“காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறீர்கள்? பா.ஜ.க 9 ஆண்டுகள் என்ன செய்தது என்று அவர்களும் கேட்பார்களே?”
“9 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு எண்ணற்ற சீர்திருத்தங்களை செய்திருக்கிறது. வரி சீரமைப்பு, 370 நீக்கம், சி.ஏ.ஏ என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பில் பல சாதனைகளை புரிந்துள்ளோம். உலக நாடுகள் இந்தியாவை வியந்து பார்க்கின்றன. நாசாவை மிஞ்சும் இஸ்ரோவின் சாதனைகள் உங்களுக்கே தெரியும். அவையெல்லாம் மோடி இல்லாமல் எப்படி சாத்தியமானது? அதுபோல இதையும் செய்வோம்.”
“இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்கினால்தான் என்ன? தாமதிப்பதுதானே சந்தேகத்தை வரவழைக்கிறது?”
“தொகுதி மறுவரையறை செய்யப்பட இருக்கிறது. அதனால் மகளிருக்கான தொகுதிகள் எவை எவை என்பதை கண்டறிந்து அறிவிக்க வேண்டியுள்ளது. எனவே கண்ணை மூடிக்கொண்டு உடனே செயல்படுத்த முடியாது. முறைப்படி அமல்படுத்துவோம்”

“சரி, ஓ.பி.சி பிரிவினருக்கான உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் 33% இடஒதுக்கீடு அர்த்தமற்றதாகி விடும் என்கின்றனவே எதிர்க்கட்சிகள்?”
“ஓ.பி.சி மக்களை அனாதையாக விட்டதே காங்கிரஸ் கட்சிதான். ஓ.பி.சி ஆணையத்தை உருவாக்கி அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் பிரதமர் மோடி. இந்த நாட்டின் பெரும்பான்மை பிரிவினருக்கு இடங்கள் இல்லாமல் போய்விடாது. நிச்சயம், இடங்கள் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க-வும் காங்கிரஸும் விமர்சிப்பதை விட்டுவிட்டு ஆரோக்யமான ஆலோசனைகள் இருந்தால் சொல்லலாம். கேட்க தயாராக இருக்கிறோம்.”
“மண்டல் கமிசன் பரிந்துரையை அமல்படுத்தவே போர்க்கொடி தூக்கிய பா.ஜ.க, ஓ.பி.சி மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல நடிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”
“வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிசன் பரிந்துரையை அமல்படுத்த பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தது என்பது தவறான குற்றச்சாட்டு. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த பொய்ப்பிரசாரங்களை இப்போதும் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.”

“உள்ளாட்சிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 1996-லேயே கொடுத்துவிட்டோம், அதை இப்போது 50%-ஆக உயர்த்திவிட்டோம் என்கிறதே தி.மு.க?”
“நிச்சயம் வரவேற்கிறோம். அதை நாங்கள் எதிர்க்கவில்லையே! அதுபோல தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இப்போது பா.ஜ.க கொண்டு வந்திருக்கும் இம்மசோதாவை எதிர்க்கவில்லை, வரவேற்றுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தடுத்தவர்கள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள்.”
“அண்ணாமலையின் 2-வது கட்ட நடைப்பயணம் தொய்வடைந்துவிட்டது என்ற விமர்சனங்கள் வருகின்றனவே?”
“நடைப்பயணத்தின் வெற்றியை கண்டு பயந்தவர்கள் சிலர் பொறாமையில் இதுபோல வதந்தி பரப்புகிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் 3,000 முதல் 4,000 பேர் அண்ணாமலையோடு நடந்து செல்கிறார்கள். நடைப்பயணம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.”

“விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக தி.மு.க, தி.க-வினர் குற்றம்சாட்டுகிறார்களே?”
“தமிழக தொழிலாளர்களுக்கு அவர்கள் துரோகம் செய்கிறார்கள் என்றுதான் சொல்வேன். 18 வகையான தொழில்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை இல்லாமல் இந்த உலகம் இயங்குமா? இதில் குலத்தொழில் எங்கிருந்து வருகிறது? பூ கட்டும் தொழில் குலத்தொழிலா? பொம்மை தயாரிப்பு குலத் தொழிலா? கொத்தனார் வேலை குலத்தொழிலா? தையல் வேலை குலத்தொழிலா? மோடி எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதுதான் திராவிட மாடலின் முதல் கொள்கையே. ஆனால் புதிய கல்விக் கொள்கையை மட்டும் முழுமையாக ஏற்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலவற்றை உருவிக் கொண்டார்கள்.”
“சரி, செருப்பு தைக்கும் தொழிலை ஊக்குவிப்பது எதற்காக?”
“செருப்பு தயாரிக்கும் தொழில் இன்றைக்கு எவ்வளவோ நவீனமாகிவிட்டது. ஒப்பந்த முறையில் பலர் செருப்பு தயாரித்து முன்னணி நிறுவனங்களுக்கு கொடுக்கிறார்கள். அந்த தொழிலை ஊக்குவிக்க மானியம், கடன் கொடுத்தால் என்ன தவறு?”

“தந்தை செய்யும் தொழிலுக்குத்தான் மானியம், கடன் என்றால், குலத்தொழிலை ஊக்குவிப்பதாகத்தானே அர்த்தம்?”
“விஸ்கர்மா யோஜனா திட்டம் அப்படிக் கூறவில்லை. கற்பனையில் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் நலனை புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும்.”

“கபில் சிபல் சொன்னதுபோல செந்தில்பாலாஜியை பா.ஜ.க-வில் சேர்க்க முயற்சிக்கிறதா அமலாக்கத்துறை?”
“இதெல்லாம் கற்பனையான் குற்றச்சாட்டுக்கள். அமலாக்கத்துறையே இதனை மறுத்துவிட்டது. நீதிமன்றத்திலும் அமலாக்கத்துறையே அதற்குப் பதில் சொல்லும்.”
நன்றி
Publisher: www.vikatan.com