Mahua Moitra: `எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் அழிவைக்

நாடாளுமன்றத்தில் அதானிக்கெதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிரானந்தனியிடம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கியதாக பா.ஜ.க எம்.பி எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மஹுவா மொய்த்ராவிடம் மட்டும் விசாரணை நடத்தியது. விசாரணையில், மஹுவா மொய்த்ரா தவறு செய்திருக்கிறார் என்பது உறுதிசெய்யப்படுகிறது. அதையடுத்து, `அவரை எம்.பி பதவியிலிருந்து நீக்கலாம்’ என அறிக்கை தயார் செய்து, அதனை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி, பரிந்துரையும் செய்தது நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு.

மஹுவா மொய்த்ரா

அந்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் அமர்வுக்கு வந்தபோது, விசாரணைக் குழுவின் பரிந்துரையை ஏற்று மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. இந்த முடிவுக்கு அவையில் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள், உடனடியாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதோடு, மஹுவா மொய்த்ராவின் பதவிநீக்கத்துக்கு எதிராக கண்டனங்களும் தெரிவித்துவருகின்றனர்.

இது தொடர்பாகப் பேசிய மஹுவா மொய்த்ரா, “என் வாயை அடைத்துவிட்டால், அதானி பிரச்னை முடிந்துவிடும் என்று அவர்கள் நினைத்திருந்தால், இப்போது நான் சொல்கிறேன். இந்த விவகாரத்தில் நீங்கள் காட்டிய அவசரமும், முறைகேடுகளும், அதானி உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும், ஒரு பெண் எம்.பி-யை அடிபணியவைக்க எவ்வளவு காலம் தொல்லை கொடுப்பீர்கள் என்பதையும் மொத்த நாட்டுக்கும் நிரூபித்துவிட்டது. நாடாளுமன்றக் குழு, ஆயுதமாக்கப்பட்டிருப்பதை மக்களவைப் பார்க்கிறது.

மஹுவா மொய்த்ரா

இந்த நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவானது, எம்.பி-க்களுக்கு ஒரு தார்மீக திசைகாட்டியாகச் செயல்பட அமைக்கப்பட்டது. ஆனால், அது தற்போது எதிர்க்கட்சிகளை புல்டோஸ் செய்யும் ஆயுதமாக மாற்றப்பட்டிருக்கிறது. எனக்கு 49 வயதாகிறது. இன்னும் 30 ஆண்டுகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியே தெருக்களிலும் போராடுவேன். உங்களின் (பா.ஜ.க) அழிவை நாங்கள் காண்போம். இதுதான் உங்களின் அழிவின் தொடக்கம். நாங்கள் மீண்டும் வரத்தான் போகிறோம், உங்களின் அழிவைப் பார்க்கத்தான் போகிறோம்” என்று சூளுரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “ஜனநாயக உரிமைகளுக்கு பா.ஜ.க துரோகம் செய்துவிட்டது. தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கக்கூட மஹுவா மொய்த்ராவுக்கு நேரம் கொடுக்கவில்லை அவர்கள். அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இது அரசியலமைப்பு உரிமைகள்மீதான துரோகம். மேலும், இது முற்றிலும் பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியல். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கட்சியின் முழு ஆதரவும் மஹுவா மொய்த்ராவுக்கு இருக்கிறது. இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து போராடுவோம். அடுத்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு நீதி வழங்குவார்கள்” என்றார்.

மஹுவா மொய்த்ரா – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “இது முற்றிலும் ஆதரவற்ற உண்மைகளின் அடிப்படையில், பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு” என்று பா.ஜ.க-வைச் சாடினார். அதேபோல், மற்றுமொரு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “மஹுவா மொய்த்ரா குற்றவாளி என்ற முடிவுக்கு வந்துவிட்ட நெறிமுறைக் குழு, பிறகு ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் இதில் தீவிர விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரை செய்கிறது… குற்றவாளி என்று முடிவுக்கு வந்த பிறகு, மீண்டும் விசாரணைக்கு என்ன பரிந்துரை. இதுவே முரண்பாடாக இருக்கிறது” என்றிருக்கிறார்.

சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி

மேலும், மற்றொரு எம்.பி பிரேம சந்திரன், “மஹுவா மொய்த்ரா மோடியையும், அதானியையும் கடுமையாகத் தாக்கிப் பேசுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான், எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் பதவிநீக்கம் செய்யப்பட்டார்” என்று மத்திய அரசை விமர்சித்தார். இந்த வரிசையில், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “இந்த முடிவானது, குற்றச்சாட்டை முன்வைத்தவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இது, முற்றிலும் நீதிக்கு எதிரானது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *