எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் `பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதன்முறையாகக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தின் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில், நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் டாக்ரே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “மணிப்பூர் மாநில கலவரங்களைத் தடுக்கவும், மீண்டும் அமைதியை நிலை நாட்டவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தவறி விட்டது. மணிப்பூரில் இப்போதுகூட கலவரம் ஓயவில்லை. மணிப்பூர் கலவரங்களை நாடு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. கட்சி அணிகளுக்குள் ஒற்றுமை மற்றும் தன்னலமற்றத்தன்மை அவசியம். வரவிருக்கும் மாநில மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்கு முன்னுரிமை அளிக்க, தனிப்பட்ட நலன்கள் மற்றும் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கவேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. அதில் தன்னுடைய அஜண்டாவை நிறைவேற்ற முன்னாள் குடியரசுத் தலைவரையும் நியமித்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com