1948-ம் ஆண்டு ஐநா சபையின் ஒப்புதலுடனும், பாலஸ்தீன குடிமக்களின் எதிர்ப்புடனும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அதைத் தொடர்ந்து ‘தங்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது’ எனப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும் எனப் பாலஸ்தீனத்தின் அரசியல் கட்சியும், போராளிக்குழுவுமான ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது வான் – தரை – கடல் வழி தாக்குதலை மேற்கொண்டது. இதைச் சமாளிக்க இஸ்ரேலும் எதிர்த் தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

இந்தப் போரால் இருநாட்டிலும் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, உக்ரைன், பிரேசில், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கும், ஈரான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், கத்தார், தென் ஆப்ரிக்கா, லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தப் போரை நாங்கள் விரும்பவுமில்லை. இந்தப் போரைத் தொடங்கவுமில்லை… என்றாலும், அதை முடித்துவைப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் நோக்கில், விமானம் தாங்கிக் கப்பலான யூஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும், அதனுடன் வரும் போர்க் கப்பல்களையும் கிழக்கு மத்திய தரைக் கடலுக்கு அனுப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் விமானப் படைகளை மேம்படுத்தவும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்குக் கூடுதல் உதவிகளை வழங்கவும், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு உறுதியளித்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்தப் போரில் ஹமாஸ் போராளிக் குழுவை பின்னால் இருந்து ஈரான் இயக்குவதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அது வெளியிட்ட செய்தியில், “தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பெய்ரூட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படையின் (IRGC) அதிகாரிகள் மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா பல ஈரான் ஆதரவு போராளி குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள SOAS மத்திய கிழக்கு நிறுவனத்தின் இயக்குநர் லினா காதிப், “ஈரானின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் ஹமாஸ் போன்ற குழுக்கள் போரில் ஈடுபடுவதில்லை. இந்தத் தாக்குதல் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழுவின் செயல்பாடுகளுக்கு இணையானதாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவும், அமெரிக்கா இஸ்ரேலின் பேச்சுவார்த்தைகளும் ஈரானை அச்சுறுத்துவதால் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் உதவியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

ஆனால், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், “ஹமாஸ் குழுவின் இந்த குறிப்பிட்ட தாக்குதலுக்குப் பின்னால் ஈரான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் இதுவரை காணவில்லை. எனினும், இருவருக்கும் நிச்சயமாக ஒரு நீண்ட உறவு இருக்கிறது என்பதை அறிவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹமாஸின் மூத்த அதிகாரியான மஹ்மூத் மிர்தாவி, “எங்கள் குழுவின் இந்தத் தாக்குதல்கள் சுயாதீனமாகத் திட்டமிடப்பட்டவை. ஈரானின் நேரடித் தலையீடு இருந்தால் கொந்தளிப்பான பதற்ற நிலை மேலும் அதிகரிக்கக்கூடும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்” என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஈரானை எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நடக்கும் போரில் ஈரான் தலையிட வேண்டாம். லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேலில் ராக்கெட்டு தாக்குதலை நடத்தியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே நாடுகளுக்கு மத்தியில் மோதல் விரிவடைவதை அமெரிக்கா விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், பாலஸ்தீனிய குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஈரானின் நேரடிப் பங்களிப்பை வெளிப்படுத்தும் எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com