`பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறோம்” என அண்மையில் அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் அவ்வாறே கூறிவருகின்றனர். இருப்பினும், `பா.ஜ.க – அ.தி.மு.க முறிவு நிரந்தரமானது அல்ல, தேர்தலுக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது’ என அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். அதற்கேற்றாற்போல, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும், `இந்த விவகாரத்தில் தேசிய தலைமை முடிவுசெய்யும்’ என்று கூறி ஒதுங்கிவிட்டார்.

போதாக்குறைக்கு, 2024-ல் பிரதமர் வேட்பாளராக அ.தி.மு.க யாரை முன்னிறுத்தும் எனும் கேள்விக்கு, `தேர்தலில் வெற்றிபெற்று தமிழக நலனுக்ககாக நாடாளுமன்றத்தில் குரலெழுப்புவோம்’ எனக் கூறிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படியான சூழலில்தான், “2024 தேர்தல் என்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டி” என்று சமீபத்தில் அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இத்தகையப் பேச்சைத் தொடர்ந்து, 2024 தேர்தல் எந்தக் கட்சிகளுக்கிடையிலான போட்டியாக இருக்கும், என்று விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி என அண்ணாமலை கூறியிருக்கும் நிலையில், எந்த கட்சிகளுக்கு இடையே தீவிரப் போட்டி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. கூடவே, `அ.தி.மு.க – பா.ஜ.க, தி.மு.க – அ.தி.மு.க, தி.மு.க – பா.ஜ.க’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com
