மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த் நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றார். அவருடன் படித்த பாலசுப்பிரமணியன் என்பவர், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 74 வயது நிரம்பிய அவர், 1966-ம் ஆண்டு முதல் 68-ம் ஆண்டு வரை ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் விஜயகாந்துடன் ஒன்றாகப் படித்திருக்கிறார்.
பள்ளி நாள்களில் தொடங்கிய நட்பு, விஜயகாந்த் நடிகரான பின்னர் மட்டுமல்லாமல் அவர் அரசியல் தலைவராக உருவான பின்னரும், தொடர்ந்திருக்கிறது. தற்போது தன்னுடைய நண்பர் விஜயகாந்தின் மறைவுச் செய்தியைக் கேட்டு, பாலசுப்பிரமணியன் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். மிகுந்த துயரத்துடன் இருந்த அவரிடம் பேசியபோது, “எனது சொந்த ஊர் விக்கிரமசிங்கபுரம் அருகிலுள்ள டாணா. நான் வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்தேன். விஜயராஜ் (விஜயகாந்தின் பழைய பெயர்) ஹாஸ்டலில் தங்கிப் படித்தார்.


வகுப்பில் நான், விஜயகாந்த், ராமலிங்கம், தியோடர் ஜெயச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் வகுப்பறையில் ஒரே பெஞ்சில் உட்காருவோம். வகுப்பில் பாடங்களை கவனமாகப் படிப்பார். ஆனால், படிப்பைவிடவும் அவருக்கு விளையாட்டில் அதிக ஆர்வம். விளையாட்டு பீரியடிலும் பள்ளி முடிந்த பிறகும், மைதானத்தில் ஃபுட்பால் விளையாடுவோம். ஃபுட்பால் விளையாடுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். படிக்கும்போது அவர், எம்.ஜி.ஆர் படங்களை ஆர்வமாகப் பார்த்துவிட்டு வந்து, எங்களுக்குக் கதை சொல்வார்.
விஜயகாந்த் பணக்கார வீட்டுப்பிள்ளை என்றாலும், நண்பர்களிடம் சகஜமாகப் பழகுவார். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுவார். படிக்கும் காலத்திலேயே அவருக்கு உதவி செய்யும் குணம் இருந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com