ஜெயலலிதா, கருணாநிதி என இருபெரும் தலைவர்கள் இருந்த போதே எதிர்க்கட்சி தலைவராக அரியணை ஏறியவர் விஜயகாந்த். பின்னர் மாறி, மாறி கூட்டணி கூட்டணி வைத்ததால் ஏற்பட்ட தோல்வி, நிர்வாகிகள் விலகல் அதாள பாதாளத்திற்கு சென்றது, தே.மு.தி.க. இதற்கிடையில் விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதும் பெரிதாக முன்னேற்றம் இல்லை. கட்சி நிகழ்ச்சிகளை பிரேமலதா விஜயகாந்தே முன்நின்று நடத்தி வருகிறார். இந்த சூழலில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து வெளியான தகவல்கள், தே.மு.தி.க தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதற்கிடையில் ஆகஸ்ட் 25-ம் தனது பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்தார், விஜயகாந்த். பின்னர் தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இதனால் அவரது தொண்டர்கள் நிம்மதியாக இருந்தனர்.
இதற்கிடையில்தான் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பூரண குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அந்த கட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தே.மு.திக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் தே.மு.தி.க நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் பொருளாளர் பிரேமலதா, கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உடனேயே கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க தொண்டர்கள் சிலர், “விஜகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்து விட்டனர். எனவே அவர்களுக்கு புத்துணர்வை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும். கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. கூட்டணி விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரமலதாவுக்கு வழங்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்கிறார்கள். இதேபோல் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் நிர்வாகிகளிடத்தில் கருத்து பெறப்படும். வெள்ளத்தின் போது சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படும்” என்கிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com