தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்கள் பணியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால்தான் இந்த மாபெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. அரசு தோல்வியடைந்திருக்கிறது. நம்பிக்கையாக இருக்க வேண்டிய அரசு மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது. தலைநகரில் பால் இல்லை, தண்ணீர் என்ற குரல் வேகமாக ஒலிக்கிறது. இன்னும் உட்புறப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, 90 சதவிகித மீட்புப் பணிகள் முடிந்துவிட்டது எனக் கூறாமல், விரைந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெருந்தொற்று ஏற்படும் போது, நோய்த் தொற்றை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் ஜிரோ நோய்த் தொற்று என்ற சூழலை உருவாக்கினோம். ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை. பல இடங்களில் விலங்குகள் இறந்து மிதந்தன. அது பெரும் நோய்த் தொற்றுகளை உருவாக்கும். இது பெரும் ஆபத்தை உருவாக்கும். இதற்கு முதலில் அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும். ஆனால் கோவையிலிருந்து வந்த மருத்துவ ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுபோன்ற ஒருங்கிணைப்பு இல்லாமல் செயல்படும் அரசை எதிர்த்து ஊடகங்களும், மக்களும் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.

இதற்கெல்லாம் கோபப்படாமல், மக்களுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது அரசின் கடமை. இந்த வெள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் இன்னும் பெரிதாக வெளியே வரவில்லை. தனியார் மருத்துவமனையில் பலர் இறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை. புளியந்தோப்பைச் சேர்ந்த மசூத் – சௌமியா தம்பதியின் இறந்த குழந்தை அட்டைப் பெட்டியில் கொண்டு செல்லப்பட்ட வீடியோவை பார்த்தேன். அவர்களுக்கு நிகழ்ந்திருப்பது பெரும் கொடுமை. அரசு மருத்துவமனையில், குழந்தை காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், காப்பாற்றப்படவில்லை. இறந்த குழந்தையின் உடலை, துணியில் சுற்றி, அதற்கான மரியாதையுடன் வழங்கியிருக்க வேண்டும். அதுதான் மருத்துவத்துறையின் தர்மம். அந்த தர்மத்திலிருந்து இந்த அரசும், இந்த அரசின் மருத்துவத்துறையும் தவறியிருக்கிறது. கால்பந்து வீராங்கனை பிரியா தொடங்கி, தவறான சிகிச்சை காரணமாக கை அகற்றப்பட்டு இறந்த குழந்தை வரை இந்த மருத்துவத்துறையில் தொடர்ந்து அவலங்கள் நிகழ்ந்து வருகிறது.

இறந்த குழந்தையைத் துணியில் சுற்றிக் கொடுங்கள் எனத் துக்கத்தில் இருக்கும் பெற்றோர் கேட்க மாட்டார்கள். அது அரசின் கடமை. அதே நேரம் இந்த நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களைத் திட்டுவதும், தாக்குவதும் கடும் கண்டனத்துக்குரியது. இந்த அரசின் மருத்துவத்துறை ஐ.சி.யூ-வில் இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com