காங்கிரஸின் தோல்வி குறித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே “மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் வேறுபட்டவை. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூற முடியாது. அப்படிப் பார்த்தால் கடந்த 2019-ல், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தன. தற்போதைய சூழலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. தற்போதைய சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது” என்றார்.
தெலங்கானாவில் ஆட்சியை பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய ஜோதிமணி, “மற்ற மாநிலங்களில் தோல்வியை தழுவியது குறித்து கட்சி ஆராயும். வரும்காலங்களில், மாநில அளவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த தேர்தல் உணர்த்துகிறது” என்றார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 6-ம் தேதி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிசோரம் மாநிலத்தில் இன்று (டிச. 5 ) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகளை முன்னுதாரணமாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக திமுக, சிவசேனா உத்தவ் அணி, பிஜூ ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கூட்டணிக் கட்சிகளுக்கு மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவை வீழ்த்த நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் அதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. “தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம்” என மல்லிகார்ஜூன கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசினோம், “நிச்சயம் இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதன் காரணமாகவே தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரிவதற்கு முன்பாகவே காலை 11.30 மணி அளவில் மல்லிகார்ஜுன கார்கே கூட்டணி கட்சிகளை ஆலோசிக்க முடிவெடுத்துள்ளார். நிச்சயம் முதலில் நடைபெறும் கூட்டத்தில் சிறு சிறு சலசலப்புகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். காரணம் தோல்விக்கு காரணமாக ஒருவரை ஒருவர் கைகாட்டக்கூடும். ஆனால் அது எல்லாவற்றையும் கடந்து சுய பரிசீலனை செய்து கொண்டு காங்கிரஸ் கட்சி நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டெழும்” என்றனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லாததால் தங்கள் வியூகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது பாஜக. இந்த 3 மாநில தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் 300 இடங்களை கைப்பற்றுவோம் என்ற புத்துணர்ச்சியை பாஜகவுக்கு கொடுத்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. அதை தடுக்க வேன்டும் என்றால் காங்கிரஸ் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டி இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com