நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இட ஒதுக்கீடு” மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், இன்னொருபுறம் 2024 தேர்தலை மனதில் வைத்துதான் பா.ஜ.க இதை தற்போது கொண்டுவந்திருக்கிறது என்று விமர்சித்தும் வருகின்றன.
இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில்,
டெல்லியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி பெண் நிர்வாகிகள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி காலில் விழுந்து வானதி சீனிவாசன் ஆசிர்வாதம் பெற முயன்றார். உடனே ஒரு அடி பின்நகர்ந்த பிரதமர் மோடி, அதைத் தடுத்து, காலில் விழக்கூடாது என்பது போன்ற அறிவுரைக் கூறினார். பின்னர் மேடையில் மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் மோடி காலில் விழுந்த போது, மோடியும் பதிலுக்கு மகளிர் அணி நிர்வாகிகள் காலை தொட்டு வணங்கினார்.
நன்றி
Publisher: www.vikatan.com