`எலி வளை' தொழிலாளர்கள் முதல் அர்னால்டு டிக்ஸ் வரை…

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில், சில்க்யாரா முதல் பர்கோட் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. யாரும் எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட மண் சரிவால், 41 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தினுள்ளேயே மாட்டிக் கொண்டனர். 16 நாள்கள் சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் 41 பேரும், நேற்றிரவு நல்லபடியாக மீட்டெடுக்கப்பட்டனர். இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு, மருத்துவக் குழு, ராணுவத்தினர், காவல்துறையினரைத் தவிர வேறு சில தனியார் நிறுவனங்களும், ஊழியர்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்!

உத்தரகாண்ட்

திருச்செங்கோடு ரிக் இயந்திரம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பி.ஆர்.டி நிறுவனம், 360 டிகிரியில் சுழலக்கூடிய, பாறைகளில் 80 மீட்டர் அளவுக்குத் துளையிடக்கூடிய ரிக் இயந்திரங்களைத் தயாரித்து வருகிறது. சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்புகொண்ட இந்த ரிக் இயந்திரத்தை, திருச்செங்கோடு தரணி ஜியோ டெக் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் மீட்புப் பணிகளுக்காக இந்த இயந்திரத்தை எடுத்துவந்த அந்த நிறுவனத்தின் பொறியாளர்களும் தொழிலாளர்களும், 110 அடி ஆழத்தில் துளையிட்டு அதன் மூலம் கேஸிங் குழாயை உள் அனுப்பினர். இந்தக் குழாய் வழியாகத்தான் உணவு, மருந்து, குடிநீர், ஆக்ஸிஜன், செல்போன் உள்ளிட்டவைச் செலுத்தப்பட்டன. பின்னர், எண்டோஸ்கோப்பிக் கேமராவும் செலுத்தப்பட்டு, தொழிலாளர்கள் நலமுடன் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. முதல் இரண்டு முறை துளையிடுவதில் தோல்வியடைந்த ரிக் இயந்திரக் குழுவினர், மூன்றாவது முறை வெற்றி கண்டனர்.

எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்!

முதலில், சுரங்கத்தின் சில்க்யாரா முனையிலிருந்து மணல் குவியலின் வழியாகப் பக்கவாட்டில் துளையிட்டு தொழிலாளர்களை மீட்டெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஐந்து ராட்சத இயந்திரங்கள் பழுதடைந்ததாகத் தெரிகிறது. இருந்தும் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் மட்டும் 47 மீட்டர் தூரம் வரை துளையிட்டது. பின்னர், அந்த இயந்திரமும் உடைந்து சிக்கிக்கொண்டது. இந்த நிலையில்தான், சுரங்கத்தின் மேல் பகுதியிலுள்ள மலை வழியாகச் செங்குத்தாகத் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.

உத்தரகாண்ட் சுரங்கம்

இதற்கிடையில், ஆகர் இயந்திரம் துளையிட்ட 47 மீட்டர் போக, மீதமுள்ள 13 மீட்டருக்கு `எலி வளை’ தொழிலாளர்கள் மூலம் துளையிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக டெல்லியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அமெரிக்காவின் ராட்சத இயந்திரம் 5 நாள்களில் 47 மீட்டர் மட்டுமே துளையிட்டிருந்தது. ஆனால், திங்கள் இரவில் பணியைத் தொடங்கிய எலி வளைத் தொழிலாளர்கள், 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தூரம் துளையிட்டு முடித்தனர். இதன் மூலம் ஓரே நாளில் இந்தியாவின் சாதனை நாயகர்களாக மாறியிருக்கின்றனர் எலி வளைத் தொழிலாளர்கள்!

நான்கு அடி அளவில் சிறிய குழிகளை, சின்ன சின்ன உபகரணங்கள் கொண்டு கையால் தோண்டி, நிலக்கரி எடுப்பதையே எலி வளை சுரங்கப் பணி என்று அழைக்கின்றனர். இந்த முறை சுரங்கப் பணியால் ஏராளமான உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டதால், 2014-ம் ஆண்டு எலி வளை சுரங்கப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டது. இருந்தும், இந்த வகை சுரங்கப் பணிகளைச் சட்டவிரோதமாக வடகிழக்கு மாநிலங்களிலுள்ள சில தொழில் நிறுவனங்கள் செய்து வருகின்றன. `எலி வளை தொழில் தடை செய்யப்பட்டிருந்தாலும், உத்தரகாண்டில் ஏற்பட்ட நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் தொழிலாளர்களை மீட்பதற்காக மட்டும் இதைப் பயன்படுத்தியிருக்கிறோம்’ என்கிறார்கள் அதிகாரிகள்.

கவனம் ஈர்த்த அர்னால்டு டிக்ஸ்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்டு டிக்ஸ் என்ற பேராசிரியர், இந்த மீட்புப் பணியில் அதிக கவனம் பெற்றார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சுரங்கப் பாதைகள் மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக இருந்துவருகிறார் அர்னால்டு. பொறியாளர், புவியியலாளர், பேராசிரியர், வழக்கறிஞர் என்று பன்முகம் கொண்ட அர்னால்டு, நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கட்டுமான ஆபத்துகள், அதில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பதால், அர்னால்டின் உதவியை நாடியது இந்திய அரசு. அதன்படி, இந்த மீட்புப் பணிக்காக இந்தியாவுக்கு வந்தவர், பல்வேறு திட்டங்களையும் மீட்புக் குழுவினருக்கு வகுத்துக் கொடுத்தார்.

மீட்புப் பணியில் அர்னால்டு டிக்ஸ்

இந்தப் பணியின் இடையே பேட்டியளித்த அர்னால்டு, “இது எளிதான வேலை கிடையாது. ஆகையால், இன்று காப்பாற்றிவிடுவோம்… நாளை காப்பாற்றிவிடுவோம் என்று என்னால் சொல்ல முடியாது. அதே நேரம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் 41 பேரும் காயமின்றி மீட்கப்படுவார்கள்” என்றிருந்தார். அவர் சொன்னதைவிட மிக வேகமாகவே இந்த மீட்புப் பணிகள் முடிந்திருக்கின்றன.

மேற்கண்டவர்கள் மட்டுமல்லாமல், இந்த மீட்புப் பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்திருக்கின்றனர். 41 தொழிலாளர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி உணவு செய்து கொடுத்தவர்கள், மருந்துகள் வழங்கியவர்கள், தொழிலாளர்கள் அடிபடாமல் சுரங்கத்திலிருந்து வெளியேற மெத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்துதான் இந்தப் பணியைச் சாத்தியமாக்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்த மீட்புக் குழுவுக்கும் உலகெங்கிலுமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன!

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *