நிதிக் குழுவின் 42 சதவிகித வரிப் பகிர்வு பரிந்துரையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். நிதிக் குழுவிலேயே இதற்காக பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் அதை சாதகமாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், நாங்கள் செய்யவில்லை. மாநிலங்களின் நலனுக்கான எங்களை அர்ப்பணித்துள்ளோம். ஆகவே, நாங்கள் 42 சதவிகிதம் கொடுக்கிறோம். இது ஒன்றும் சிறிய தொகை அல்ல. நாங்கள் கொடுக்கும் பணத்தை வைப்பதற்கு சில மாநிலங்களில் பெரிய கஜானாகூட இல்லை” என்று பேச, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர்கள் ஆர்வாரம் செய்து வரவேற்றனர்.
இது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்கள் சுயமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார். இது மாநிலங்களை ஆளும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பி.வி.ஆர் சுப்பிரமணியம் சி.எஸ்.இ.பி (CSEP-Centre for Social and Economic Progress) அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசியது, அந்த அமைப்பின் இணையத்தில் வீடியோவாக இருந்தது. அது, பல மாதங்களாக அங்கே இருந்தாலும்கூட சில நூறு பேர் மட்டுமே பார்த்திருந்தனர். பி.வி.ஆர் சுப்பிரமணியம் பேசிய இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ‘த ரிப்போர்ட்டர் கலெக்ட்டிவ்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஶ்ரீகிரிஷ் ஜலியல், நிதின் சேத் பல கேள்விகளை எழுப்பி, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார்கள். இந்தக் கேள்விகள் பிரதமர் அலுவலகத்திற்குப் போய் சேர்ந்த அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள், பி.வி.ஆர். சுப்பிரமணியம் பேசிய அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் பிரச்னையை விளக்கமாக எடுத்துச் சொல்லும் வீடியோவை இப்போது ‘அல் ஜசீரா’ ஊடகம் வெளியிட, பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
”பொருளாதார ரீதியில் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் செய்திருக்கும் ஒரு மோசடித் திருவிளையாடல் மட்டுமே இப்போது வெளிவந்திருக்கிறது. இன்னும் எத்தனை திருவிளையாடல்கள் வெளியே வராமல் மறைந்து கிடக்கின்றனவோ? தோண்டிப்பார்த்தால்… இன்னும் எத்தனை பூதங்கள் வெளியே வருமோ?” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேச ஆரம்பித்துள்ளனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
