அரசு போக்குவரத்துக் கழகங்களின் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐ.என்.டி.யு.சி, டி.டி.எஸ்.எஃப், பி.எம்.எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் குறித்து அறிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து இன்று, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இது குறித்து, சி.ஐ.டி.யு, தொழிற்சங்கத்தின் சௌந்தரராஜன் அளித்தப் பேட்டியில், “தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து இப்போது முடிவு சொல்ல முடியாது. பொங்கலுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த பதில் நியாமற்ற, திருப்தியற்ற பதில். இந்த அரசு போக்குவரத்து ஊழியர்களை இரண்டாம் தர குடிமக்களாகத்தான் நடத்துகிறது. எங்களுக்குத் தரவேண்டிய கடனை மட்டுமாவது திரும்பக்கொடுங்கள் எனக் கேட்டோம். அதையும் ஏற்கமறுக்கும் அரசுக்கு, வேலை நிறுத்தத்தை ரத்து செய்யக் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது… எனவே, நாங்கள் எங்களின் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற முடியாது. ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக, 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதாவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேநிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச் சாலை பேருந்து நிறுத்தம், கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் ஆகிய நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையிலிருந்து 3 நாள்களுக்கும் மொத்தம் 11,006 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து 8,478 பேருந்துகள் என மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூர் செல்லும் SETC பேருந்துகள், ECR வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கன்னி செல்லும் SETC பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்தும், NH45 வழியாக தென்மாவட்டங்கள் செல்லும் SETC பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்தும் புறப்படும். பொங்களுக்குப் பிறகான 16,17,18 தேதிகளில் பிற மாவட்டங்களிலிருந்து 17,589 பேருந்துகள் இயக்கப்படும்.
இதற்கான முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 5, தாம்பரம் சானிடேரியம் பேருந்து நிலையத்தில் 1, கிளாம்ப்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5 என முன்பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதளம் மூலமும் முன்பதிவு செய்யலாம். ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 18004256151, 044-2474900, 044-26280445, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், கோயம்பேட்டிலிருந்து பிற பேருந்து நிலையங்களுக்குச் செல்ல 24 மணி நேரமும் சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், திருச்சி, கரூர், தூத்துக்குடி, திருச்செந்தூர், சிதம்பரம், மயிலாடுதுறை, செஞ்சி, அரியலூர், ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய வழித்தடங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும். வழக்கம்போல பூந்தமல்லி புறவழிச்சாலை மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
முடிச்சூர் வள்ளுவர் குருகுலம் பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வேலூர், ஆரணி பேருந்துகள் இயக்கப்படும். கே.கே நகர் பேருந்து நிலையத்திலிருந்து ECR வழியாக புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் பேருந்துகளும், தாம்பரத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி வழியான பேருந்துகளும் இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநில பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாது எனக் கூறவில்லை.

ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்யாமல் விட்டதை, இப்போது தி.மு.க ஆட்சியில் செய்ய வேண்டுமென அ.தி.மு.க-வின் தொழிற்சங்கமும் , எடப்பாடி பழனிசாமியும் தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் செய்யாமல் விட்டதை நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொல்லவில்லை. நிதிநிலை சீரான பிறகு செய்வோம் என்றுதான் சொல்கிறோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேர்தல் நேரத்தில் இதைச் செய்தால், மக்களுக்குக் கோபம் வரும் என்பதற்காகதான் இதைச் செய்கிறார்கள். ஆனால், தங்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீதுதான் மக்களுக்குக் கோபம் வரும்.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொரோனா முதல் மிக்ஜாம் வரை பல்வேறு நிதிசுமையை அரசு கையாண்டு வருகிறது. மிக்ஜாம் புயலுக்கு மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், தி.மு.க அரசு மக்களுக்கான நிவாரணம் வழங்கியது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் மக்களுக்குத் தெரியும். இந்த நிலையில், உடனே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூறுவது நியாயமல்ல. தமிழ்நாடு, கேரளாவைத் தவிர பிற மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதில்லை. வளர்ந்த மாநிலங்களாகக் கூறப்படும் சில மாநிலங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆனால், முதல்வர் ஸ்டாலின், தீபாவளிக்கு ஊழியர்களின் கோரிக்கைக்கு முன்பே 20 சதவிகித போனஸ், 5 சதவிகித ஊதிய உயர்வு என வழங்கினார். இந்த நிலையில், அரசுக்கு இடையூறு செய்யும் நோக்கில் அ.தி.மு.க தொழிற்சங்கம் நடத்தும் போராட்டம் ஏற்கத்தக்கதல்ல. மக்களின் துன்பத்தில் நாம் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். நிதிச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com