தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் மற்றும் ஓ.பி.எஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டது குறித்து சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகர் உரிமைக்கு உட்பட்டது. அதனை எதிர்க்கட்சித் தலைவர் கேட்க முடியாது” என்று கூறினார்.

இதனால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபடவே , அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் அப்பாவு. இந்த நிலையில், சபாநாயகர் தனது மரபைக் கடைப்பிடிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
அவையிலிருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் குறித்தும், அ.தி.மு.க-விலிருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டது குறித்தும் 10 முறை சபாநாயகர் அறையில் கடிதம் கொடுத்திருக்கிறோம். 10 முறை கடிதம் கொடுத்தும் நாங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததற்கான காரணம் என்ன என்பதை சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியபோது, முழுமையாகப் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார். அவர் தனது மரபைக் கடைப்பிடிக்கவில்லை.

தனக்கு தனிப்பட்ட அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இருந்தாலும் காலம் காலமாக எதிர்க்கட்சித் தலைவர் அருகில்தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அமரவைக்கப்படுகிறார். மற்ற உறுப்பினர்கள் சபாநாயகர் விருப்பப்படி அமரவைக்கப்படுவார்கள். அதில் நாங்கள் குறுக்கிடவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மரபுப்படி நியமிக்கப்படவில்லை. எல்லாவற்றையுமே அவர் நிராகரிக்கிறார். சபாநாயகரின் புனிதமான இருக்கையில் அவர் நடுநிலையோடு அவர் நடந்துகொள்ள வேண்டும்.

நீதிமன்றமே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, அவர்கள் மூன்று பேரையும் எந்தக் கட்சியும் சாராதவர்கள் என்று சபாநாயகர் அறிவிக்க வேண்டும். மேலும், மக்கள் பிரச்னையை அவைக்கு நாங்கள் கொண்டு வரும்போது, முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று பார்க்கும்போது, சபாநாயகரே குறுக்கிட்டு பதில் சொல்லி விடுகிறார். அமைச்சர்கள் யாரும் பதில் சொல்வதில்லை. இதனால் மக்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாமல் போகிறது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com