“ரூ.4,000 கோடி செலவு செய்தும் தண்ணீர் ஏன் வடியவில்லை…

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், பேரிடர் மீட்பு குழுவினரும் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றுதல், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லுதல் போன்ற பணிகளில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

சென்னை

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்துவருகின்றனர். அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.

அதற்கெல்லாம் பதிலாக, “ரூ.4,000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறது எனச் சிலர் அரசியல் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய இயற்கை சீற்றத்தை பெரும் சேதமின்றி கடந்திருக்க, அரசின் இது போன்ற திட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், `முறையான முன்னெச்சரிக்கை திட்டமிடல் இல்லாததால்தான் சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது’ என தி.மு.க அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.

பெருங்குடியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “விடியா தி.மு.க அரசு, மழை வெள்ள பாதிப்பு இருக்கின்ற பகுதிகளுக்கு, நேற்றைய தினம்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தது வேடிக்கையாக இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் ஒரு வாரமாக எச்சரித்ததை, இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

நிர்வாகத் திறனற்ற இந்த அரசு சரியான முறையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் இன்றைக்கு சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. `மழை நின்ற பிறகு எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறதோ, அந்தப் பகுதியில் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு என்.எல்.சி நிறுவனத்திடம் ராட்சத மோட்டார்களை வாங்குவோம்’ என்று நேற்றிரவு தலைமைச் செயலர் பேட்டி கொடுக்கிறார். இவர்கள் என்றைக்கு மோட்டார் வாங்கி, என்றைக்குத் தண்ணீரை வெளியேற்றப் போகிறார்கள். அதுவரை மக்கள் தண்ணீரில் அவதிப்பட வேண்டுமா… திட்டமிட்டுச் செயல்படாத அரசு என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சியில் இதுபோன்ற காலங்களில் தொடர்ந்து மக்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளைக் கொடுத்தோம். ஆனால், வானிலை ஆய்வு மையம் ஒரு வாரமாக எச்சரித்தும், இந்த அரசு மக்களுக்கு எச்சரிக்கையாக எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை. இதனால் மக்கள் எந்த உணவுப் பொருள்களை வாங்கி வைக்கவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இன்றைக்குத் தள்ளாடுகின்றனர்.

`ரூ.4,000 கோடி செலவில் சென்னை மாநகர பகுதியில் மழை நீர் வடிகால் அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது’ என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் வீர வசனம் பேசி வந்தார்கள். ஆனால், நேற்று முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. தலைநகரமே தத்தளிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரூ.4,000 கோடி செலவு செய்தும் தண்ணீர் ஏன் வடியவில்லை… என்று மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.

சென்னை

இந்த ரூ.4,000 கோடி கூட நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், உலக வங்கியின் திட்டத்தின் மூலமாக, ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலமாக நிதி பெறப்பட்டது. பணி துவங்குகிற காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு டெண்டர் விட்டு இந்த பணி தொடங்கப்பட்டது. எனவே, இந்த திட்டத்தைக்கூட இவர்கள் கொண்டு வரவில்லை, நாங்கள் தான் கொண்டு வந்தோம். ஆனால், கமிஷன் வாங்குவதிலேயே குறியாக இருந்த இவர்கள் உரிய காலத்தில் மழைநீர் வடிகால் பணி முடிக்கப்படாத காரணத்தினால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *