மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் என்ற `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதாவை பாஜக அரசு நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதா மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அதேசமயம், இந்த மசோதா நிறைவேட்டப்பட்டாலும் கூட, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் அடிப்படையில் தொகுதி வரையறை போன்றவை முடிக்கப்பட்ட பிறகு 2029-ல் தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீட்டை திமுக ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “தொகுதி வரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என மோடி உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் ஸ்டாலின், “மகளிர் ஒதுக்கீட்டை தி.மு.க அன்றும் வரவேற்றது, இன்றும் வரவேற்கிறது. மகளிர் மீது பா.ஜ.க-வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு வந்திருப்பார்கள்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம், முற்பட்ட சாதியினருக்கு (EWS) 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பா.ஜ.க அரசு, அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ, எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த 9 ஆண்டுகாலமாகக் காட்டவில்லை. இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கி, ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள். பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த ஒன்பது ஆண்டுக்காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

2016-ம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளும், பெண் எம்.பி-க்கள் அனைவரும் சேர்ந்து இதற்காக குரல் கொடுத்தார்கள். `33 சதவிகித இடஒதுக்கீடு என்ன ஆனது?’ என்று கேட்டார்கள். அப்போது பா.ஜ.க அரசு வாய் திறக்கவில்லை. வாய் திறக்க ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதாவைக் கொண்டு வரவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா? சுமார் 27 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் உள்ளது. 2005-ம் ஆண்டும் தி.மு.க இடம்பெற்ற ஒன்றிய அரசு இதனைத் தாக்கல் செய்தது. முதலில் ஆதரிப்பதாகச் சொன்ன பா.ஜ.க எதிர்த்தது. பா.ஜ.க பெண் உறுப்பினரான உமா பாரதியே இதனைக் கடுமையாக எதிர்த்தார். கடந்த காலத்தில் இதை எதிர்த்தவர்களில் தற்போதைய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முக்கியமானவர்.
2014-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்ற பா.ஜ.க அரசு, நினைத்திருந்தால் அதனை உடனடியாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், ஒன்பது ஆண்டுகளாக அதிக பெரும்பான்மை உள்ள பா.ஜ.க. அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022-ன்படி 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார். நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற வைத்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர்கள் இருவரின் சாதனைகளும் இப்போது நினைவு கூரப்பட வேண்டியவை ஆகும். காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புக்காகச் செய்தாலும், இப்போதைய பிரச்னைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், ஒன்றிய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தி.மு.க சார்பில் ஆதரிக்கிறேன்.
அதேசமயம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல், அதன் நியாயத்தைப் பரிசீலிக்குமாறு ஒன்றிய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் நடத்தாத ஒரே நாடு இந்தியா. எப்போது நடைபெறும் என்ற உத்தரவாதத்தையும் இதுவரை பா.ஜ.க.அரசு தரவில்லை. எப்போது நடைபெறும் என்று தெரியாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் நடக்கவுள்ள தொகுதி மறுவரையறை, அதன்பேரில் 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும் விசித்திரம் பா.ஜ.க-வால் அரங்கேற்றப்படுகிறது.

தமிழ்நாட்டின், தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com