மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களைப் படகு மூலம் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்லுதல், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்குதல், தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், மீட்புப் பணிகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ்தாஸ் மீனா, “சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் மூலமாக மொத்தமாக, 25,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இது தவிர, மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை என மற்ற மாவட்டங்களிலிருந்தும் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இன்றைக்கு, சுமார் 75,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மொத்தமாக, 372 நிவாரண முகாம்கள் செயல்பட்டுவருகிறது. இதில், 41,406 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு, உணவு உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.மேலும், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வீட்டிலிருப்பவர்களுக்கும் சேர்த்து என மொத்தமாக 37 லட்சம் உணவுப் பொட்டலங்களை நாங்கள் விநியோகம் செய்திருக்கிறோம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் மொத்தமாக 866 இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 19,000 பேர் படகு உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு படையும் சேர்த்து 850 பேர் கொண்ட 34 குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.
மின்சார விநியோகத்தைப் பொறுத்தவரையில், அனைத்து பகுதிகளிலும் மின்சாரத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின்சாரத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தண்ணீர் தேங்கியிருக்கும் போது மின்சாரத்தை வழங்கினால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். சென்னையைப் பொறுத்தவரையில் நான்கு சதவிகித பகுதிகளில் மட்டும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. அதேபோல் தாம்பரத்தில் 5.64 சதவிகித பகுதிகளிலும், திருவள்ளூரில் 7.85 சதவிகித பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை 9 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் சென்னையில் நான்கு, செங்கல்பட்டில் ஐந்து. இது தவிர 311 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன. மேலும் 108 குடிசை வீடுகள் முழுமையாகவும் 35 வீடுகள் பாதியளவு 88 வீடுகள் லேசாகவும் பாதிப்படைந்து இருக்கின்றன. தெற்கு சென்னை வடசென்னையின் சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த நிலைமையும் விரைவில் சீரமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைத் தேவைக்கு மேல் வாங்கி வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com