திருப்பூர்: தகரக் கொட்டாயாக மாறிய பயணிகள் நிழற்குடை;

திருப்பூர் மாவட்டம், 53-வது வார்டுக்கு உட்பட்ட A.B. நகர்ப் பகுதியில் ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டோர் தினசரி பேருந்தில் பயணம் செய்கிறார்கள். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொங்கலூருக்கு செல்லும் ’28-ம் நம்பர்’ பேருந்து இந்த A.B. நகர் பேருந்து நிறுத்தம் வழியே செல்கிறது.

A.B. நகர் பேருந்து நிறுத்த நிழற்குடை – திருப்பூர்

இந்தப் பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு சுமார் 15 வருடங்கள் ஆகிவிட்டது. பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை பயன்படுத்தி வருகிறார்கள்.‌ இந்த நிலையில் முறையான பராமரிப்பு ஏதும் இல்லாமல் பேருந்து நிறுத்தம் தற்போது பழுதடைந்து, காற்றடித்தால் சரிந்துவிழும் தகரக் கொட்டாயாகக் காட்சியளிக்கிறது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், இந்த நிழற்குடையின் கீழ் நிற்பதற்கே பெரும் அச்சம் கொள்கின்றனர். கனமழையின்போதும், கடும் வெயிலின்போதும் தஞ்சமடைய இயலாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஆனாலும், வேறு வழி இல்லாமல் பொதுமக்களே இந்த நிழற்குடையைச் சுற்றி துணிகளாலும் விளம்பர பலகைகளாலும் தடுப்பு ஏற்படுத்திப் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள உரிய அதிகாரிகளிடமும், வார்டு கவுன்சிலரிடமும் பல முறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் மிகவும் வேதனைப் படுகிறார்கள். இத்தனைக்கும், இந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து வெறும் மூன்று கிலோமீட்டரில்தான் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது.

A.B. நகர் பேருந்து நிறுத்த நிழற்குடை – திருப்பூர்

தற்போது இந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கற்கள் ஒரு மனநலம் குன்றியவரால் அமைக்கப்பட்டவை எனக் கூறும் மக்கள், மனநலம் குன்றியவருக்கு இருக்கும் மனிதநேயம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். எனவே, பயணிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக இந்த நிழற்குடை சீரமைக்கப்படவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை தீர்க்கமாக வலியுறுத்துகின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *