இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


இந்தநிலையில், நவம்பர் 17 அன்று இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கடந்த முறை நீதிமன்றம் கேட்ட விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், `நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்று கொண்டுடிருப்பதாகவும், அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன் உள்ளிட்ட 17 காவல்துறை அதிகாரிகள், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும்’ சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.


அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், `இது தொடர்பாக விளக்கமளிக்க, சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞரும், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் அடுத்த விசாரணையின்போது ஆஜராவார்கள் எனத் தெரிவித்தார்.


அதைத்தொடர்ந்து, நீதிபதிகள், “தற்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com