மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்த ரவணப்பசாமி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மகன் தன்னை பராமரிக்காதது குறித்து குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவில், “என் பெயர் ரவணப்பசாமி. எனக்கு ஒரு மகன், 3 மகள்கள் இருக்கிறார்கள். கடந்த 2012இல் டி.குன்னத்தூரில் உள்ள எங்கள் பூர்வீக சொத்துகளை நானும், எனது மனைவியும் சேர்ந்து என் மகன் வெங்கிடசாமிக்கு தானமாக எழுதிக்கொடுத்துவிட்டோம். எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாக என் மகன் உறுதியளித்ததால், சொத்தை எழுதி கொடுத்தோம். ஆனால், என் மகன் சொன்னபடி எங்களை கவனிக்கவில்லை.
எனக்கும் என் மனைவிக்கும் 10 ஆண்டுகளாக சிறு உதவி கூட செய்யவில்லை. கடந்தாண்டு என் மனைவி இறந்து விட்டார். அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்கு கூட என் மகன் நேரில் வரவில்லை. இந்நிலையில், எங்கள் பூர்வீக சொத்துகளை வீட்டுமனைகளாக மாற்றி அவர் விற்பனை செய்கிறார். இதுசம்பந்தமாக உசிலம்பட்டி தாசில்தாரிடம் புகார் அளித்திருந்தேன்.
அப்போது என் மகன் வெங்கிடசாமி, எனக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், 2 பிளாட்டுகளும் தருவதாக கூறி புகாரை வாபஸ் பெற வைத்தார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, எங்கள் பூர்வீக சொத்துகளை வெங்கிடசாமிக்கு தானமாக வழங்கியதை ரத்து செய்யும்படி ஆட்சியரிடம் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் தான செட்டில்மென்டை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர்கள் ஆஜராகி, சொத்துகளை தானமாக பெற்றுக்கொண்டு பெற்றோரை பராமரிக்காத மகனின் சொத்து பதிவை முதியோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் மனுவை மதுரை மாவட்ட கலெக்டர் பரிசீலித்து 8 வாரத்தில் சொத்து பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com