சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். மாநில தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உலகளவிலான பல்வேறு நிறுவன முதலீட்டாளர்கள், தி.மு.க அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய பியூஷ் கோயல், “2023-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின், “பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போதுதான் கோட் சூட் போடுவது வழக்கம். ஆனால், அனைத்து வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருக்கிறேன்.
இன்று காலை முதல் சென்னையில் மழை பெய்துவருகிறது. அதுபோல இங்கு வந்ததும் முதலீடும் மழையாகப் பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் நீங்கள் அனைவரும், சமத்துவத்தைப் போற்றிய வள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறீர்கள். தொழில்துறையில் மேன்மையும், தனித்த தொழில் வளமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பண்டைய காலத்திலிருந்து கடல் கடந்து வாணிபம் செய்திருக்கிறோம். அதனால்தான், `திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவாகியது. பல்வேறு வகைகளில் இந்தியாவுக்குத் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம். 1920-ல் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அதனால்தான், தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களிலும் முன்னேறிய மாநிலமாக இன்று இருக்கிறது.

இங்கு வந்திருக்கும் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயலின் குடும்பம் அரசியல் குடும்பம். அவரின் அப்பா, அம்மா இருவரும் அரசியலில் கோலோச்சியவர்கள். வங்கிப் பணியாளராக வாழ்வைத் தொடங்கி, நிதி மற்றும் வர்த்தகத் துறையில் தனித்திறமை படைத்தவர் பியூஷ் கோயல். இந்த நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்திருக்கின்றன. முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும் என உறுதியளிக்கிறேன். தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருள்களில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
நாங்கள் துறைவாரியாக நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு சந்திப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு, 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என இருமுனை அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறோம். ஒரு மாநிலத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், அந்த மாநிலத்தின் ஆட்சியின் மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு அமைதியான சூழல் நிலவ வேண்டும். ஆட்சியாளர்கள் மீது உயர் மதிப்பு இருக்க வேண்டும். மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் இந்த அம்சங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தொழில்துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது.

பெரியார், அண்ணா, கலைஞரின் அடியொற்றி பெண்களுக்கு சமூகம், கல்வி, பொருளாதாரம், அரசியல்ரீதியாக அதிகாரமளிக்கிற திட்டங்களை இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்திக்கொண்டு வருகிறோம். பெண்களுக்குப் பொருளாதார விடுதலை என்பது திராவிட மாடல் அரசின் முழக்கம். அதனால்தான், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், தோழி விடுதி எனப் பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். கடந்த இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதோடு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையில் 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை, தமிழ்நாடு உயர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை திட்டம் என பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்களான ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளைப் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.

உலக அளவில் முதலீட்டாளர்களை வரவேற்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டிருக்கிறது. இந்த மாநாடு நடைபெறுகிற இரண்டு நாள்களிலும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. மூலதனம் நிறைந்த மின்னணு பொருள்கள் உற்பத்தி மின்சார வாகனங்கள், பெட்ரோலிய பொருள்கள், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி, ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள், தோல் பொருள்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com